Wednesday, March 7, 2012

கந்தர் அந்தாதி (அருணகிரிநாதர் நூல்கள்)

கந்தர் அந்தாதி
(அருணகிரிநாதர் நூல்கள்) - க.பா.சக்தி வேலன்



ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர்.

பெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்றும் அந்நூலுக்கு உரையை வில்லிபுத்தூரார் உடனுக்குடன் கூறி வந்தார் என்றும் கூறுவர். அவ்வாறு கூறி வரும் போது 'திதத்த' எனத் தொடங்கும் 54வது செய்யுளுக்கு வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது திகைத்து தோல்வியுற்றார் என்றும் அதற்கு அருணகிரிநாதரே உரை அருளினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர். வில்லிபுத்தார் உரை கூற முடியாமல் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும் என புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச் செய்தார் என்றும் கூறுவர். இக்கருணையைக் கருதியும் 'கருணைக் கருணகிரி' என்னும் வழக்கு எழுந்தது.



காப்பு

வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து
வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.


ஐராவதம் என்ற யானைக்கு தலைவனாகிய இந்திரனையும், பிரம்மனையும், ஏனைய தேவர்களையும், தாமரை போன்ற கையில் பாஞ்ச சன்யம் என்கிற சங்கை ஏந்தி இருக்கும் திருமாலையும், தட்ச யாகத்தில், வீரபத்திரன் சொருபத்தில் வந்து ஜெயித்த சிவபெருமானின், குமாரனும், கோழிக்கொடியை உடைய குமாரக் கடவுளை, சகோதரனாக பெற்றிருப்பவனும், வயல்கள் சூழ்ந்த அருணாசலத்தில், யானைமுகத்தை உடைய கஜமுகாசுரனை, வெற்றி கொண்ட, யானை முகம் கொண்டவனும் ஆகிய கணபதியை, வணங்குகிறேன்.


உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே.


கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற, பசு இனங்கள் (வாழ்கின்ற), முல்லை நிலத்திற்கு, தலைவனாகிய திருமாலின், கருமை நிறத்தையும், வலிமையும், உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்), கோட்டையாக உள்ள, கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களின், ஜிவனை, மாய்த்து, தேவர்கள் உள்ளத்தில் இருந்த, நாம் ... அச்சத்தை, போக்கி அழித்த, தெய்வமே, ஆட்டு வாகனத்தில் ஏறும், உஷ்ணத்தை உடைய அக்னி தேவன், சேர்ந்திருக்கும், நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய, அண்ணாமலையில் விளங்கி அருளும், மிகுதியாகப், பெருகும், கற்புடமைக்கும், அழகிய, மை ... அஞ்சனம் தீட்டிய, செவிகளை எட்டிப் பிடிக்கும், விழிகளின், கிருபைக்கும், ஒப்புவமை இல்லாத, உண்ணாமுலை என்கிற பெயர் கொண்ட பார்வதியின், குமாரனே, உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.



நூல்

திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே. 1


லட்சுமி தேவிக்கு நாயகனாகிய திருமாலும், நல்ல பெண் தெய்வமாகிய உமையை இடப்பக்கத்தில் வைத்திருக்கும் சிவபெருமானும், மதிக்கும் விதத்தில், பழமையான வேதத்திற்கு, சிறந்த பொருளை விளக்கிய, சாமர்த்தியம் உடைய, இளங்குமாரனாகிய முருகப்பெருமான், நிரந்தரமாக வாசம் செய்யும், வானளாவும் திருப்பரங்குன்றம், சிறந்த செந்தில் பதி, பங்கயம் பொருந்திய பழநி, சுவாமி மலை, அந்தக் கந்தக் கடவுள் திருவிளையாடல் செய்த பல குன்றுகள், நடந்து, பூமி அதிர்கின்ற, யானைக் கூட்டங்கள், வாழ்கின்ற, குளிர்ந்த, கருமேகங்கள் சூழ்ந்த பழமுதிர்சோலையையும், துதி செய்யுங்கள். ..


செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு
செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே
செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்
செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே. 2


ரிஷப வாகனத்தை உடைய, புனித முர்த்தி யாகிய, ஈசனின், குமாரனே, தெய்வீகமாகிய, சரவணப் பொய்கையின் நீரில், செனித்த, தூயனே, சங்கை ஏந்தியுள்ள திருமாலின் மருகனே, என்றெல்லாம், விருதுகள், முன்னதாகவே சொல்லி வர, அதைக் கேட்டவுடன் அந்த இடத்திலேயே, தன்னிலை அழிந்து சானித்தியம் அடையும் பவனி மாதர்களின், (அவசம் ஆவேசம்), பார்வையும், தெய்வயானையின் மார்பாகிய கவசத்தையும், சட்டையாக தரித்துள்ள, தோள்களை உடைய முருகப் பெருமான், திருவடிகள், என் தலையின் மீது வீற்றிருந்தன. ..


சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச்
சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச
சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்
சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே. 3


சிரசின் மேல், கங்கா ஜலத்தின், ஆரவாரம், நீங்காத (சிவபெருமான் உண்ட), நஞ்சமோ, இந்தத் தலைவியின் கண்? சக்கரம் ஏந்தி, நவநீதத்தைத் திருடிய, புல்லாங்குழல் இசைக்கும் (திருமால்), தேவர்கள் எல்லாம் மயக்கம் அடையும்படி, ஊது என்று கட்டளை இட்டு, சப்தத்தைக் கிளப்பிய, இவளின் (இந்தத் தலைவியின்) கழுத்து சங்கு போன்று இருக்கிறது, வள்ளிபுனத்தில் வாழும் வள்ளியைக் கலந்த, குமரக் கடவுளை, தெய்வீகமாகிய சோழ ராஜன், அதிக ஆசையுடன் வணங்கி, திருப்பணி செய்த, சுவாமி மலையில் வாழும் தேன் போன்ற மொழியை உடைய இந்தப் பேண்ணுக்கு. ..


தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற
தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே. 4


தேன் போன்ற மொழியை உடைய பார்வதியின், பாதியாகிய சிவபெருமான், பெற்றுக்கொள்ளும்படி, பிரணவத்திற்கு, முன்பு, தேவலோகத்தின், நலனெல்லாம் அழியும்படி, தம்முடைய கோபத்தைக் காட்டிய, சூரபத்மாதிகளை, ஆண் சுராக்கள் வாழும், இடமாகிய சமுத்திரத்தில், கணுக்களை உடைய, கரங்களும், தோள்களும், அவர்களின் சிரங்களும், பூமியில் விழும்படி, அவர்களை ஜெயித்து அழித்த, குமரக் கடவுள், உபதேசித்த, பொருள், ஈரேழு பதினாலுலகமும் ஒரே தன்மையாக பொருந்தி இருந்தது. ..


தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போ
தித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா
தித்தவித் தார முடையா ரருள்வெள்ளந் தேக்கியன்பு
தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனவே. 5


தித்த என்ற தாள ஜதி விரிவுகளை, தன்னுடைய நடனத்தின் மூலம், அழிவில்லாத நடராஜப்பெருமானுக்கு, மற்ற தேவர்கள் எல்லாம் வணங்கும்படியாக, முன்னொருகாலத்தில் சுவாமி மலையில், உபதேசம் செய்தவரும், விஷேசமான, கிருத்திகை மாதர்களின் புதல்வரும், செந்தில் ஆண்டவரும், நெற்றிப் பொட்டை, சூரியனைப் போல் ஒளி வீசும்படி தரித்துள்ள, அற்புதமான இரண்டு தேவிமார்களை உடைய கந்தப் பெருமான், தன்னுடைய க்ருபா நதியை உள்ளத்தில் நிரப்பி, பக்தியை மூளும்படி செய்து, ஒப்பற்ற மோட்ச வீட்டை நான் அடையும்படி, பல துன்பங்களைத் தருகின்ற, பிறப்பாகிய, அக்னியை, அவியச் செய்தார். ..


செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்
செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய் திங்கட் சேய்புனைந்த
செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்
செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே. 6


சாமந்தி மாலையையும், நீலோற்பல மாலையையும் புனைந்திருக்கும், புயங்களை யுடைய முருகனே, உன் அடியார்களுடைய, இதயமாகிய உண்மை நிலையில், மிகுதியாக பொருந்தி இருக்கும், நீ, க்ருபை கூர்ந்து, அந்த மாலையை நீ கொடுத்து அருள வேண்டும், இளம் பிறையை, அணிந்திருக்கும், சிவந்த மாலைக்காலம், பார்வதி பங்கராகிய பரமசிவனை, போல் விளங்குகிறது, இனிமேல் வரப்போகிறது, உன்னைத் தியானிக்காதவர்கள் அடையும், ஜெனனமாகிய பிறப்பு, வருத்தத்தை விளைவிக்கும், அஞ்ஞான இருளைப் போன்று, நீடித்து நிற்கும், தொலையாத, இராக்காலம். ..


திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்
திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்
திமிரத் திமிரக் தனையாவி யாளுமென் சேவகனே
திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே. 7


இருள் நிறைந்ததும், திமிங்கலத்திற்கு வாசஸ்தலமாக இருப்பதும் ஆன, சமுத்திரத்தை, கோபித்த, சிவந்த வேலாயுதத்தை உடையவனே, கையிலுள்ள வேலாயுதமும், மழுங்கும்படியாக குற்றிய, ராட்ஸச குலத்திற்கு எமன் போன்றவனே, குற்றிய, மலையிலிருந்து தேன் ஆறு போல் பெருகும், காட்டு ஆற்றின் வளப்பத்தை உடைய வள்ளி நாயகியே, யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனா நாயகியே, மிகவும், என்னை அணைத்து எனது ஆவியை காப்பாற்ற வேண்டும், என்று சல்லாபம் பேசுகின்ற, வீரனே, பூ சப் பூசப், நெருப்பைப் போல தகிக்கின்றது, சந்தனம் முதலிய குளிர்ந்த வஸ்துக்கள் எல்லாம். ..


சீதளங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருக
சீதளங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ
சீதளங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ்
சீதளங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே. 8


மகாலட்சுமியின், மார்பகத்தையும், சங்கையும், திருத்தோளிலும், திருக்கரத்திலும், தரித்துள்ள திருமாலின் மருகனும், குளிர்ந்த சந்திரனின், அழகிய கோணல் வடிவமான பிறையை (தரிக்கும்), சிரசை உடைய பரமசிவனின், குமாரனுமாகிய முருகனுக்கு, என்ன சொத்து உளது என்று கேட்டால், அருவெறுக்கத்தக்க, செல்வம், குற்றத்தையும், துன்பத்தையும், கொடுக்கும், என்று கருதி அதை விட்டு நீங்கிய ஞானிகள், வணங்கும், வள்ளி நாயகி மூலம், கிடைத்த சீர்வரிசைகள், ஊது கொம்பும், சேவல் கொடியும், வேலாயுதமும், மயில் வாகனமும், மலைகளை ஆளும் உரிமையுமே. ..


சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச்
சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்
சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்
சிலைமத னம்படு தாமரை வாவி திரள்சங்கமே. 9


நீலோற்பலகிரியாகிய திருத்தணி மலையில் காணப்படும், தேனும், அன்னப் பட்சிகளும் நிறைந்திருக்கும், தாமரைத் தடாகத்தில் வசிக்கும், சங்கினங்களே, வில்லை உடைய மன்மதனின், பாணம், என்னைக் கொல்வது போல் தாக்குகிறது, குமாரக் கடவுளின் மயில் வாகனத்தின், எச்சிலாகிய சரப்பத்தின், எச்சிலாகிய தென்றல் காற்றையும், ஒருமுறை கடையப்பட்ட கடலையும், நிலவையும், நான் என்ன செய்து கடப்பேன்? ஆர்பாட்டத்துடன் கோபத்தை, சுற்றத்தார் எல்லோரும், என்மேல் காட்டுகிறார்கள். ..


திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால்
திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க
திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க
திரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே. 10


ஸ்திரமான, லட்சக் கணக்கான, அசுரர்களை, வெற்றி கொண்ட, வேலாயுதனை, பிரம்மாவுக்கும், திருமாலுக்கும், ஆயிரம் கண்ணுடைய இந்திரனுக்கும், ருத்ராட்சம் அணிந்துள்ள பரமசிவனுக்கும், இறைவனாகிய கந்தக் கடவுளை, நான் புகழ்ந்து பாட உத்தேசிப்பது, சிவந்த சங்குகள் முழங்குகின்ற, கடலை, கடந்து செல்பவன், நீந்திப் போகும் புத்திக்கும், சந்திரனை, பிடிக்கும் பொருட்டு, கையளவை, ஆகாசத்தில் நீட்டும், சிறு பிள்ளையின், புத்தியைப் போலும் இருக்கிறது. ..


திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்
திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத்
திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத்
திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே. 11


நாலு திசைகளிலும், எல்லோரும் திகைக்கும்படி பரந்து இருக்கும், பூமியின் கண், நீக்கி அருள்வாயாக, மாமரமாய் நின்ற சூரபத்மனை, விளங்கும்படி, ஆயிரம் பணா மகுடங்களை உடைய ஆதிசேஷனின் தலையின் மேல், இந்த சங்குகள் எல்லாம், ஊறும்படி, பெரிய விசாலமான, சமுத்திரத்தின் கண், அடக்கி அழித்த, சிவந்த வேலாயுதப் படையை உடையவனே, கதறி, மாறுபட்ட, பர சமய கோட்பாடுகளில், நீங்கி நிற்பவனே, (உலையில்) குற்றுவதற்கு, குற நாயகியாகிய வள்ளி நாயகிக்கு, யானையின் தந்தத்தை, பறித்துக் கொடுத்த, ஆதி மூலமே, பஞ்சேந்திரியங்களால் கட்டுண்ட சிறை போன்ற என்னுடைய ஜனனத்தை, நீக்கி அருள்வாய்). ..


சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து
சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட
சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்
சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே. 12


தோகையும், அடியார்களுக்கு அருளும் வரப்பிரசாதத்தையும் உடைய, தாவிச் செல்லும் மயிலில் ஏறி, க்ரவுஞ்ச கிரி, தூளாகும்படி எழுந்தருளி, கரையால், சூழப்பட்டதும், ஆமைகளுக்கு இருப்பிடமானதும் ஆன கடல், ஓ என்று ஓலமிட, அரக்கர்களின் சேனையால், தள்ளப்பட்ட, தேவர்களின் சிறை வாசம் நீங்க, தகுந்த, ஐவேலை, பிரயோகித்த முருகப்பெருமானின், இனிய திருவடிகளை, நான் அணுகாமல் பிரிந்திருப்பதினால், அல்பமாகிய, பஞ்சேந்திரியங்களின், ஆசையாகிய, இருளில், என்னுடைய இருதயம், சேர்ந்து நின்று (இருளொடு), திகைக்கின்றது. ..


தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர்
தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்
தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்
தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே. 13


நிறைந்திருக்கும், பசுக் கூட்டங்களை மேய்க்கும் திருமாலையும், மும்மதங்களையும் பொழியும் ஐராவதத்திற்கு தலைவனான, இந்திரனையும், அவருடன் சேர்ந்திருக்கும், தேவர்களையும், அவர்களுக்கு இருப்பிடமான அமராவதியையும், ரட்சிப்பது, நம்முடைய, கூரிய வேலாயுதத்தின், தொழிலாகும், என்று சொல்லி (அதைக் கட்டளை இட்ட) முருகனின், வாசஸ்தலம், இதோ இருக்கிறது, திகைத்து, தன் நடையை தோற்கடிக்கிறது என்று அன்னப் பட்சியும், தளர்ந்து போகும், நடையை உடையவளே, பயப்படாதே (அவை யாவன), செண்பக மலரால், விளங்கும், இனிய, பூஞ்சோலையும், செங்கழுநீர் தடாகமும், திருச்செந்தூர் தலமுமேயாகும். ..


செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க
செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க
செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற்
செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே. 14


சிவந்த குங்கும பொட்டு இட்டு, விளங்கும், ஒளி வீசும் நெற்றியை உடைய வள்ளி நாயகியின், வதனம், தாமரை போன்றது, எள்ளின் பூ போன்றது, நாசி, என்று அவளின் அழகை நலம் புனைந்து உரைத்த, குமரக் கடவுளே, ஜீவராசி கூட்டங்கள் வசிப்பதற்கு, அண்ட கோடிகளை, சிருஷ்டித்த பிரமனை, சிறையில் அடைத்த, வேலாயுதத்தை உடைய, செந்தில் ஆண்டவனே, அகங்காரத்தினால், என்னை வசைகள் பேசுவார்கள், சுற்றத்தார்கள் (அதனால்), எல்லோராலும் துதிக்கப்படும், உன் புயத்தை, எனக்கு தந்தருள வேண்டும் ..


திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்
திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்
திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்
திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே. 15


பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற கொடை வள்ளலே, என்றெல்லாம் பலரிடமும் பேசி, என்னை உழல வைக்கும், வறுமையாகிய, இருளை, பிளக்கக்கூடிய, ஞான சூரியனே, கர்ணபூரம் என்ற ஆபரணத்தைத் தரித்திருக்கும், வள்ளி நாயகி, பெருமிதத்துடன் (தழுவும்), மார்பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத்தை உடைய, சிவபெருமானின், காதில், இனிமையாக பிரணவத்தை உபதேசம் செய்தவனே, வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்து, என்னுடைய இருதயத்தில் நீ வீற்றருள வேண்டும், ஒளிந்து, எமன் கொள்ளை கொள்ளாதபடி, உயிரைக் காப்பாற்றுவதற்காக ..


சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்
சேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புனத்துச்
சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்
சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே. 16


ரிஷப வாகனத்தை உடைய பரமசிவானல், பல் தகர்க்கப்பட்ட, (நிசி + அந்தகன்) பூஷா என்னும் சூரியனும், உன் திருக்கையில் ஏந்தி இருக்கும், கொடியாகிய சேவலும், பொல்லாதவைகளாய் இருக்கின்றன, தினைப் பயிர் நன்றாக வளர்ந்துள்ள கொல்லையை, காவல் புரியும், நீண்ட, காட்டாற்றின் வளப்பத்தை அநுபவிப்பவளுமாகிய (வள்ளியையும்), ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, சந்தன சேறு பூசியிருக்கும், சிவந்த, சொக்கட்டான் கருவி போன்ற மார்பகமும், கொடி போன்ற இடையையும் உடைய (தேவசேனையையும்), இரண்டு பக்கங்களிலும் சேர்த்துக்கொண்டு இருப்பவனே, உன்னைப் பிரிந்திருக்கும் போதும், உன்னிடம் கலந்திருக்கும் போதும், கொடியவைகளாய் இருக்கின்றன). ..


சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்
சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர்
சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள்
சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே. 17


இசைந்த, கரும்பையும், மாவடுவையும் (ஒத்த), பேச்சையும், கண்களையும் உடைய (வள்ளி நாயாகியின்), மார்பின் பக்குவ நிலையால், குறவர் குடிலுக்கு, அவளைக் களவு மணம் செய்து கொண்டான் முருகன் என்ற அபவாதம் ஏற்பட்டது, அந்தக் காலத்தில் தானே, நன்றாக விளங்கியது, தெள்ளிய அலைகளை உடைய சமுத்திர ஜலம், ஒன்று சேர்ந்து, பூமியை, அழிக்கின்ற, பிரளய காலத்திலும், அழிவில்லாத, முருகவேளுடைய, வடசேரி தென்சேரியில், மாலையில், பக்கவாக்கில், வயலில், தினைப்பயிரின் விளைவானது ..


தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந்
தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத்
தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத்
தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே. 18


தினைப்புனத்திற்கு இறைவியாகிய வள்ளி, காதல் புரிகின்ற, முருகக் கடவுளின், திருவடித் தாமரையில், பத்தி செய்கின்ற உள்ளத்தையும், புத்தியையும், அவருக்கு உரிய நைவேத்தியமாக, விருப்பமுடன் சமர்பித்த அடியார்கள், உண்மையாகவே மாற்றி விட்டார்கள், பருந்துக் கூட்டங்களும், அக்னியும், சாப்பிடுவதும், அழகிய அறிஞர்களால் உணர்த்தப்பட்ட, மார்க்கத்தில் ஒழுகாததும், பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டதும், தின் பண்ட வகைகளின், கழிவாகிய மலஜலமாதிகளை, ஏற்றுக்கொண்டிருப்பதும், உள் நின்று இயங்குகின்ற பிராணனை, எமன் உண்டுவிட்டால், க்ஷண நேரத்தில் ஊசிப்போகும், அருவெருக்கத்தக்க இந்த உடம்பை, மாற்றி விட்டனர்). ..


சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல்
சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே. 19


பார்வதியின் பாகராகிய சிவபெருமான், நமக்கு, உபதேசம் செய்வாய் என்று கேட்டு, பணிவுடன் வாயை மூடிக்கொண்டு, காதால் கேட்க, யானைகளும், சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும், கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய, பொதிக மலைக்கு, தலைவனாகிய, அகத்திய முனிவனின், பாட்டனாரும், பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின், மருகனாகிய குமரக் கடவுள், அப்போது உபதேசம் செய்ய, தியக்கமுற்றிருந்தார், மிகவும் கேவலமானது, அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும், பிரம்மன், பழமையான வேதத்தை, எதற்காக கற்றுக் கொண்டான்? ..


செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்
செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்
செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்
செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே. 20


கீர்த்தி உடைய, துங்கபாத்திரி நதி, வணங்குகின்ற, கங்கையின், கையில் விளங்குபவனே, சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே, சுரபுன்னை இலையை, தரித்திருக்கும், வள்ளியின் மணாளனே, தண்டாயுதமும், உயர்ச்சியும், ஒழுக்கமும் உடைய, (மார்கண்டேயரை அழிக்கப் போனதால் எதிரியாகிய) எமனை, அழியும்படி, கால்களால் உதைத்த சிவ பிரானின், மைந்தனே, தெற்கிலிருக்கும் எமபுரத்திற்கு அழைத்துப் போவதும் யாவராலும் ஒதுக்கப்பட்டதும், ஆபத்துககள் நிறைந்ததுமாகிய வழியில், எனது மனம் முரிந்து, உழலாமல், நீ இருக்க வேண்டும், என் உள்ளத்தில் ..


சிந்தா குலவ ரிசைப்பேரு முருநஞ் சீருமென்றோர்
சிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலை
சிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச்
சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே. 21


ஒருகாலும் அழியாது, நம்முடைய வம்ச பரம்பரையின் பெயரும், நாம் வசிக்கும் இந்த நகரமும், நமது சிறப்பும், என்று பொய்யாக எண்ணுகின்ற, அஞ்ஞானிகள் பால், நான் சேராதிருக்க நீ அருள வேண்டும், அக்னி தான் உருவெடுத்த சேவலை, கொடியாக வைத்து, விளங்கும், பச்சை நிறமுள்ள, மயிலேறிய சேவகனே, இவ்வுலகத்தை அளப்பதற்காக, வாமன அவதாரம் எடுத்த, திருமாலின் மருகனே, சூரபத்மனை வென்றவனே. ..


செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்
செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்
செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த
செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே. 22


செற்றை எனும் மீன் இனம், திகழ்கின்ற, வயல்கள், பூஞ்சோலை, மதில்கள் (இவை), திகழ்கின்ற, மலையின் மேல், மேகக் கூட்டம், தவழ்கின்ற, பழநி மலை ஆண்டவனே, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், புராதனமான ராஜ்ஜியத்தை ஆளும்படி, மனதில் நினைத்து (அப்படிச் செய்த கிருஷ்ணமூர்த்தியின்), ஒரு நேத்திரமாகிய சூரியனின், மைந்தனாகிய எமன், அனுப்பிய, தூதர் கூட்டம், வருகின்ற, கிழ திசை அடைந்த இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற, அந்த கடைசி நாளில், எழுந்தருளி, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று). ..


தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்
தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்
தினகர ரக்கர சத்தி யின் றாகிலத் தேவர்நண்ப
தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே. 23


பகன் பூடா என்னும் இரண்டு சூரியர்களுடைய, நேத்திரத்தையும், பல்லையும், அழித்த சிவபெருமானுக்கு, உபதேசம் செய்த ஞானாசிரியனும், செந்தில் பதியில் இருப்பவரும், ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமான, வேதங்கள் பூஜித்த, சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான, கை வேலாயுதம், இல்லை என்றால், தேவர்களின் சிறந்த அமராவதி நகரம், இல்லாமல் போயிருக்கும், வஞ்சனையை உடைய அசுரர்கள், இறப்பைத் தவிர்த்திருப்பார்கள், உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள். ..


செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்ட
செகம்புர வாதிங்ஙன் செய்ததென் னோமயல் செய்யவன்பு
செகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்க
செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே. 24


இவ்வுலகத்திலும், ஊரிலும் உள்ள, ஒழுங்கான, உறவினர் எல்லாரும், பயந்து கொண்டு, கூட்டமாக கூடிக்கொண்டு, ஆட்டினுடைய, தலையை, காப்பாற்றாது, இந்த இடத்தில், வெறியாட நினைத்து அதைக் கொல்லக் கருதுவது என்ன விபா£தம்? (அதற்கு பதிலாக) ஒருதலை காமமாக மயங்கி இருக்கும் இந்தப் பெண்களின் விரக தாபம், சிவந்த, வலிய, ஆதி சேடனை, சொந்த வாசஸ்தலமாக, நித்திரை செய்யும் மகாவிஷ்ணு, புகழ்கின்ற, குற்றமில்லாதவனே, தாமரை வாவியில், சங்குகள், உரக்கமாக சப்தம் செய்கின்ற, செந்தில் பதியானே, என்று அவன் நாமத்தைச் சொன்னால், அந்தக் கணத்திலேயே மயக்கம் தீர்ந்து விடும். ..


தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்
தெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள்
தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்
தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே. 25


தெளிவைத் தருகின்ற, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும், நான்கு மறைகளிலும், முதலில் விளங்கிய தெய்வீகமாகிய சங்கப் பலகையிலும் (மதுரையில்), மாசற்ற, குற்றால மரத்தின் கீழினும் (தட்சிணாமூர்த்தியாக), முதன்மை ஸ்தானத்தில் விளங்குகின்ற, அழிவில்லாத நித்தியராகிய சிவ பெருமான், பணிந்து நிற்கக் காரணம் என்ன? நட்சத்திரம் போல, பிரகாசிக்கும், முத்தையும், தேவாமிர்தத்தையும், ஒத்த, பல்லையும், வார்த்தையையும் உடைய, மங்கையாகிய, தினை தானியத்தை கொழிக்கின்ற வள்ளி, கொடுக்கும், முத்தத்தில், ஆனந்தத்தில் அமிழ்ந்திருக்கும், முருகப் பெருமான், குருவாய் எழுந்தருளி உபதேசிக்க, செவியைத் தாழ்த்திக் கொண்டு, பணிந்து நிற்கக் காரணம் என்ன?) ..


செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு
செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச்
செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட்
செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே. 26


நாகாசல வேலவனே, என்னுடைய காதுக்கு, உன்னுடைய நீங்காத, உரிமையை (உனக்கும் எனக்கும் விடாத தொடர்பை ஏற்படுத்தி) கொடுக்கும், உன்னுடைய கீர்த்தியை சேர்த்துக் கொள்ள, வலிய, என் இதயமாகிய, செந்தாமரையில் இருக்கும், ஜீவாத்மாவாகிய பட்சி, இல்லற துன்பத்தைப் பார்த்து நடுங்கும் பொழுது, உன்னுடைய கொடியாகிய சேவல், பயப்படாதே என்று சொல்லி, என்னை அடிமை கொண்டது, மிகப் பெரிய, முன்பு செய்த வினையால் விளையும், ஜனனத்திற்கு விதையாகிய, மலை போன்ற ஆசைக் கூட்டத்தை, போர் புரிவதில் வல்லமை உள்ள, உன் திருக்கை வேல், தகர்த்து விட்டது, உன்னுடைய கிரியா சக்தியாகிய தேவயானை, இச்சா சக்தியாகிய வள்ளி இவர்களின், சிறந்த திருவடிகள் என் சிரசின் கண் வந்து அமர்ந்தன, இனி நான் சம்பாதிக்க வேண்டிய வேறென்ன இருக்கிறது. ..


தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்
தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்
தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்
தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே. 27


நெஞ்சமே, பாசக் கயிற்றை, சேர்ந்திருக்கும் (பிடித்திருக்கும்), கையை உடைய, எமன், இந்த உடலாகிய கூட்டை அழிப்பதற்கு முன், இப்போதே சம்பாதித்துக்கொள், ரிஷபம், தனுஷ், ஆடு, மீனம், விருச்சிகம் (முதலிய எல்லா ராசிகளையும்), எல்லா திசைகளிலும் உள்ள அண்டங்களையும் சிருஷ்டித்த, பிரம்ம தேவனை, சிறையில் அடைத்து, வேறு தெய்வங்களின், பக்தியில், மாறிப்போகும் மனப்பான்மையை, அடையாத, ஆயிரம் கண்களை உடைய இந்திரனின், சிறையை நீக்கினவரும், நீரிலும் நெருப்பிலும் சமணர்களால் செலுத்தப்பட்ட, பனை ஏடுகளையும், அவர்கள் செய்த பல கொடுர செயல்களையும், அழித்த, சுவாமியான, தெய்வயானை நாயகனாகிய கந்தக்கடவுளின், நல்ல அனுக்கிரகத்தை, உறுதியாக, (தேடிக்கொள் மனமே) ..


சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே
சிக்குறத் தத்தை வடிவே வெனார்சிவ ரன்பர்செந்தாள்
சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ்
சிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே. 28


(தினைப்பயிரை உண்ண வந்த) கிளிகளை ஓட்டி, அந்த தினைப்பயிரை, ரட்சிக்கின்ற, பெண்ணாகிய, குறிஞ்சி நிலத்தில் வாழும் குறப்பெண்ணாகிய, அந்த வள்ளிநாயகியின், மார்பின் சுவட்டால், சதாகாலமும், பிரகாசிக்கின்ற புயத்தையுடைய கந்தக்கடவுளே, உன் வேலாயுதத்தை புகழ்கின்ற அடியார்கள், உன் சிவந்த திருவடிகளை, உறுதியாய் பற்றிக்கொள்ளக் கண்டும், சில அஞ்ஞானிகள், தம்முடைய புகழ், நலியும்படி, இழச்சிக்கு இடமானதும், குறைந்து போவதுமாகிய, செல்வத்தை, நல்ல வழியில் தர்மம் செய்யாமல், பல வழிகளில் அவற்றைத் தொலைத்து, வருந்துவார்கள், வடிவேலைத் துதிக்காதவர்களே இவர்கள். ..


திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே. 29


விளங்குகின்ற, மாலை சூட்டிய, தனது திருவடியை, வணங்குகின்ற அடியார்களின், திருவாக்கின்படி நடக்க (சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் 11 வது பாட்டாக திருக்கடைக் காப்பு என்று ஒரு பாட்டு உண்டு. அப்பதிகத்தை பாடுவார்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பார். இதன்மூலமாக அடியாருக்கு அந்தப்பலனைத் தேடிக்கொடுப்பதை இங்கு கூறுகிறார்). தேவாரத் திருப்பதிகங்களை ஓதி, தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், தான் என்றும் கலியாண சுபுத்திரனாக நிற்கும் திருத்தணியையும், துதித்து, அணியும் திருவெண்ணீறு, மும்மலத்தைப் போக்கடிக்கும், முழுப்பொருள் இதுவே என்று நம்பும் கற்புடமையையும், கொடுக்கும், என்று நினையாத, சமணக் கூட்டங்களை, வருத்தம் தரும், கழுமரத்தில் ஏற்றி, கலக்கம் அடைந்து அழியும்படி, வாதுபுரிந்த சம்பந்தப்பெருமான் ஆகிய குமரக் கடவுள் அன்றி, வேறு பிரத்யக்ஷ தெய்வங்கள் கிடையாது. ..


தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்த
தெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார்
தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தே
தெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே. 30


மற்ற தேவர்களையும், பூமி, நீர், அந்தக்கரணம், நெருப்பு, காற்று, ஆகாசம் முதலிய ஐந்து பூதங்களையும், படைத்த, பிரம்ம தேவன், நம்மேல் எழுதிய தலை எழுத்தை (முருகனின் நாம சங்கீரத்தனம்), அழித்துவிடும். (அதனால்) மாசற்ற, அழகிய, கருட வாகனனாகிய, நரசிம்மரின் மருகனே, வெட்சி மாலை அணிந்த தெய்வமே, நறுமணம் வீசும், கூந்தலையுடைய வள்ளியை, தினைப்புனத்தில், கந்தர்வ மணம் செய்துகொண்ட, குமரக் கடவுளே என்று துதியுங்கள், உங்கள் தீய வினை எல்லாம் ஒழியும்படி ..


தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந்
தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத்
தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்த
தீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே. 31


தீமையாகிய, இழிச்சொல், அனுபவிக்கும்படியாய், பூலோகத்தில் புகழ் பெறவும், தேவர்கள் உலகத்தில் போகங்களைப் பெறவும் எண்ணி, சிவந்த அக்னி தேவன், ஏறுகின்ற, ஆட்டை, கருணை இல்லாமல் பலி கொடுத்து யாகம் செய்கின்ற, மறையோரே, இனி அப்படி திகைக்காமல், தெளிவான அறிவை, தந்தருள்க என்று, இடப வாகனத்தை உடைய, சிவபிரானின், மைந்தனே, கருவி கரணங்கள் ஐவேலை செய்யும் விழிப்பு நிலையிலும், அவைகள் ஒடுங்கி இருக்கும் துரிய நிலையிலும், உனக்கு எங்களிடத்தில் கிருபை உண்டாகி கடாட்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள், மோட்சம், உங்களுக்கு கிடைக்கும்படி. ..


சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ்
சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச்
சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவா
சித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே. 32


அடியேனுக்கு கிட்டும் படி அருள வேண்டும், தத்துவ மூர்த்தியே, சிவனார் குமாரனே, வெட்சி மாலை அணிந்த, குறிஞ்சி நிலத்திற்கு அதிபதியே, அலை தாவுகின்ற, உப்பை உடைய, கடலின் கண், மா மரமாக நின்ற சூரனை, ஜெயித்த, வீரனே, மிகவும் விருப்பமுடன், கரும்பும், அந்த சிவந்த பவளமும், வாயும், மொழியாகும், பெண்களுக்கு, என்று வர்ணிக்கும் காம சூத்திரத்தை, ஓயாமல்படித்து, இதற்கு இனமான வெகுளியினால், துன்பப் படாமல், நல்ல ஞான அறிவை, அடியேனுக்குக் கிட்டும்படி அருள வேண்டும்). ..


சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற்
சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருத
சேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே
சேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே. 33


அழகிய, திருமுலைப் பால் ஊட்டி, பெரும் பாக்கியமாய் கிடைத்த, என் ஐயன், என்றெல்லாம், பார்வதி கொஞ்சிப் புகழ்கின்ற, குழந்தை, நீங்காமல் வசிக்கின்ற, சிவந்த காலை உடைய, அன்னப்பட்சிகளும், நூலோடுகூடிய, ஆம்பல்களும், நிறைந்திருக்கின்ற, திருச்செந்தூரை, தியானிப்பாயாக, அறிவின்மையால், தங்கள், சமயக் கோட்பாடுகள், என்று உணராத, திருந்தி உழலும் பரசமய கூட்டத்தை விட்டு, மனமே, சேது முதலாகிய, மற்றும் அநேக சமுத்திரங்களையும் நதிகளையும், போய் ஸ்நானம் செய்து, உழல்கின்ற வேலையை, விட்டு, (சேந்தூர் கருது). ..


திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத்
திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத்
திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால்
திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே. 34


மாறுதல் இல்லாதவனே, ராத்திரி, பகல், சமுத்திரம், பூமி, விண்ணுலகம், இவைகளை எல்லாம் மும்மூர்த்திகளில் முதல்வனாய் நின்று படைத்தவரும், கையில் பிரம்ம கபாலம் ஏந்தியவரும், கைலாய நாதரும், ஆரவாரம் மிகுந்த, ஆனந்த நடனம் செய்பவருமாகிய சிவபெருமானுக்கும், அவரின் இடப்பாகத்தில் சேர்ந்திருக்கும், இமயமலையில் உற்பவித்த, தாயாகிய பார்வதிக்கும், மகிழ்ச்சியைத் தரும், புதல்வனே, செந்தில் பதியானே, குயவனின் சக்கரம் ஒருமுறை சுற்றி வரும் முன் எண்ணற்ற முறை சுற்றி வரும், என் உள்ளத்தை, மாற்றி அமைதியைத் தந்தருள்க. ..


திருத்துள வாரிகல் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்க
திருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தை
திருத்துள வாரன்னை செந்தூரையன் னள்செம் மேனியென்பு
திருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே. 35


துளசிமாலை அணிந்த திருமாலின் கரு நிறத்துடன், போட்டி போடுகின்ற, மாலைக்காலத்தோடு, விண்ணிலிருந்து, மழை விடாமல் பெய்கிறது, சங்கு கூட்டங்கள், வசிக்கின்ற, சமுத்திரம், இடை வெளி இல்லாமல் முழங்குகின்றது, இந்தப் பிரிவாற்றாமையினால் மெய்மறந்து இருக்கும் என் மனதை, ஆறுதல் புரிவதற்கு, உரியவர் யார்? பெற்ற தாயும், செந்தில் பதியைப் போல் இருக்கிறாள், சிவந்த மேனியில், எலும்பு மாலையும், உதிர்கின்ற விபூதிப் பொடியும் படிய, நீண்ட, ஜடாபாரத்தை உடைய பரமசிவன், குமாரனே, இனிமேல் என்னால் இந்த விரக தாபம் தாங்க முடியாததால், உன் வெட்சி மாலையை எனக்கு தந்தருள வேண்டும். ..


செச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச்
செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ
செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச்
செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே. 36


வெட்சி மாலை தரித்திருப்பவனே, தாவிப் பாய்கின்றதும், சர்ப்பங்களிடத்தில் பகையும், கூர்மை பொருந்திய, வலிய, வாயினிடத்தில், பாம்பை வைத்துக் கொண்டு, சிவந்த, மலையின் கண், அதனுடைய உயிரை உண்ணுகின்ற, மயிலை வாகனமாக உடையவனே, (பரமசிவன் ஆக்னியைப் பார்த்து) உன்னுடைய சிவந்த கரத்தில், இந்த வெப்பமான அக்னிப் பொரியை ஏந்திக் கொண்டு, சரவண தடாகத்தில் கொண்டு போய் விடு, என்று சொல்ல (அங்கு உற்பவித்த), பாலகனே, உன்னுடைய திருவடிகளை நாங்கள் அடையும்படி, செய்வாயாக இகழ்ச்சிக்கு இடமான, ஐம்புல ஆசையுடன் சேர்ந்த இந்த ஜீவ வாழ்க்கை, இனி மேல் நமக்கு வேண்டாம், செல்வம் அதிகரித்தாலும் (இனி அலம்) ..


சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர்
சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ்
சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற்
சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே. 37


மனம் திருந்துதல், அழகாகும், புஷ்பங்கள் உள்ள, வேங்கை மரமாக நின்றவனும், சிறந்த வில்லை உடைய குறவர் கூட்டத்தினர், சந்தேகப்பட்ட தன்மையை, கோபித்து, அந்தக் காட்டில், தூய சன்னியாசி ரூபம் எடுத்தவனும், தினைப் பயிரைக் காவல் காத்து வந்த, சிறந்த வள்ளிக்கு, மலை அரிசி (தினை அரிசி) விளையும் அந்த வயலில், தன்னுடைய உண்மை சொரூபத்தைக் காட்டிய, குமாரக் கடவுளும், தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 30 சீர்க்கும், தலைவனாக (ஞான ஞானசம்பந்தராக) அவதரித்தவனும், கங்கா ஜலமும், அருகம்புல்லும், விளங்கும் நீண்ட, ஜடாபாரத்தை உடைய சிவகுமாரனாகிய முருகனின், சிறிய திருவடிகளுக்கு (சீர்க்கை வனப்பு) ..


சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற்றிரி சிந்தையிடுஞ்
சிற்றம் பலத்தை வரஞான தீபமிட் டார்க்குப்பரி
சிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ்
சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே. 38


பர ஆகாச வெளியாகிய, சுவாமியும், பக்தி என்னும், நெய்யை வார்த்து, ஆகம சாஸ்திரம் என்னும் நூலை, திரியாக்கி, இதயமாகிய, தீபம் ஏற்றுகின்ற, தகழியில் இட்டு, ஜீவனுக்கு பற்று கோடாகிய, கிருபை உண்டாகும் பொருட்டு, மெய்ஞான தீபத்தை, ஏற்றின அடியார்களுக்கு, பரிசாக, தனது குக சாயுச்யம் என்னும் பலனை, கிருபை செய்யும், செந்திலாண்டவனின், எதிரிகளை அழித்த, சிறிய பாணம் அல்ல, என் இதயத்தில் தைத்து வருத்துவது, அந்தக் கந்தனின், அழகிய புயத்தில் அணிந்த, நீலோற்பலமாகிய பாணம் தான். ..


தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன்
தீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந்
தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரண
தீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே. 39


வறுமையாகிய பாவத்தை, ஏற்றுக் கொண்டு, மனது உடைந்து வேதனைப் படும்போது, உறவினர் என்று சொல்லப்படும் பெரிய ஐஸ்வரியவான்கள், தீந்து போன, அந்துப்பூச்சியால் அரிக்கப்பட்ட, கேழ்வரகு தானியத்தைக் கூட, தானம் கொடுக்க இசைய மாட்டார்கள் (ஆதலால்), வெட்சி மாலையும் நீலோற்பல மாலை¨யும் புனைந்தவனே, குகையில் வாழும் வள்ளியம்மையையும், யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனையையும், இருபக்கங்களிலும் வைத்திருப்பவனே, சிவ தியானம் செய்யும், புத்தியை, வரமாக அளிக்கும், கந்தப் பெருமாளே, எதிரிகளை அழிக்கும் உனது திருவடிகளே, பொக்கிஷமும் உறவுமாகும். ..


சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்
சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்
சேமர விக்கம் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்
சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே. 40


சிவந்த, சூரியனுக்கு, அர்க்கிய ஜலத்தை, + மந்தேகர்களின் தடையை விலக்கும் ஆயுதமாக, இறைக்கின்றவர்களும், தமக்கு செய்யப்பட்ட காயத்திரி மந்திர உபதேசத்தையும், முப்புரி நூலின் தூய்மையையும், காப்பாற்றுகின்ற மறையோர்களின், யாகத்தில் கொடுக்கும் அவிர் பாகத்திற்கு, அழகிய, நல்ல பலனை கொடுப்பவனே, போர் செய்யும், கொடிய சூரபத்மனின், வைரம் பொருந்திய, மாமிசத்தினால் ஏற்பட்ட, (விக்னம்) இடையூறை, அழித்தவனே, என்னைத் துன்புறுத்துகின்றன, காமச் சின்னமாகிய அன்றில் பட்சியும், மன்மதனின் தேராகிய தென்றலும், மணியோசை கேட்கச்செய்வதால் எருதுகளும், கரும்பு வில்லும், தாமரைப்பூ பாணமும் ஆர்ப்பாட்டத்துடன் முழங்குகின்ற தெள்ளிய அலையை உடைய சமுத்திரமுமே. ..


தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத்
தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய்
தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத்
தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீ நரகே. 41


வணங்குகிறேன், நாகாசல வேலவனே, சமுத்திரத்தின் கண், மகாபலசாலியான சூரபத்மன், இந்திர லோகத்தை, அழிக்காதபடி, அவனை வதைத்தவனே, (என்னைக் குறைவரக் காப்பாற்றி) தண்டாயுதத்தை உடைய எமன், தொன்று தொட்டு வந்து, அழகிய நல்ல சுற்றத்தாரும், பிள்ளைகளும், என் உடலைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு அழச்செய்து, எம் உயிரைப் பிரித்து, தெள்ளிய தன்மையை உடைய, தன் ஊராகிய எம்புரிக்கு கூட்டிச் சென்று, தனது உத்தரவின்படி, சென்று நுழைக்கும், நரகாக்கினியைக் நீக்குவாய்) ..


தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர்
தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந்
தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர்
தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே. 42


புத்தி கெட்ட, கூட்டத்தாரிடை, கொடையாளி என்று பேசப்படும், அவர்களிடத்தில் போய், எனக்கு தருமம் செய்யுங்கள் என்று இரக்க வைக்கும், மிகவும் கொடியதான, வறுமை, தினந்தோறும், வயிற்றில் பசியாகிய அக்னி எரியும் பொழுது, அதனுடன் சேர்ந்து என்னை தகிக்கின்றது, தீமையாகிய, நம்முடைய, நாள்தோறும் வருத்துகின்ற துன்பத்தை, நீக்க வல்ல, சேங்கோட்டு வேலவனின், செந்திலம்பதியிலுள்ள, அழகிய ஜலம், சிவப்பு நிறத்தைக் கொண்ட, பவளம் போன்ற இதழை, இனிய சங்கைப் போல, வெண்மை நிறமாக, கொடுக்க வல்லதோ? ..


செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ்
செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ்
செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச்
செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே. 43


தினை விளையும் நிலத்தை உடைய, ஒழுங்கான, சிறுகுடி என்னும் நகரத்தாருக்கு, தெரியாமல், அந்தத் தினைப்புனத்தைக் காவல் செய்த வள்ளி நாயகியை, சிவந்த கொல்லைப் பயிரைச் சூழ்ந்து கொண்டிருந்த, ஆடு, தாவுகின்ற கடம்பை என்கிற மான் கூட்டம், மற்றும் வேறு ஜாதி மான்கள், நிரம்பி இருக்கும், குன்றில், அவளைக் காந்தர்வ மணம் செய்து கொண்ட, கந்தக் கடவுளே, அழகிய கொன்றை மாலையை உடைய சிவபெருமான், ஐயனே எனப் போற்றுகின்ற குமாரக் கடவுளே, சிறிய சதங்கை அணிந்த, அழகிய, சிவந்த நின் திருவடித் தாமரையை, நான் அடைவது எந்தக் காலம்? இருவினைகளையும் தூரத்தில் நீக்கிவிட்டு. ..


சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன்
சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக
சேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச்
சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே. 44


சேது முதலிய, மற்றும் பல புண்ணிய தீர்த்தங்களும், வணங்குகின்ற, கங்காதேவியின் மைந்தனே, நந்த கோபனின் பாலகனாய் அவதரித்து, வெண்ணை திருடனாய் யசோதையால் கட்டப்பட்ட தம்புக் கயிற்றால் அன்றி, வேறு எதற்கும் கட்டுப்படாத, சிறு இடையனாகிய கிருஷ்ண மூர்த்தியின், செல்வ மருமகனே, சிவந்த, ஆம்பல் பூ நிறம்போலும், உற்ற, சிவந்த வாயை உடைய, வள்ளி மணாளனே, மோட்சத்திற்கும் எனக்கும் உள்ள பெரிய தூரத்தை, தாண்டக்கூடிய, நல்ல பலனைக் கொடுக்கக் கூடிய மார்க்கம், ஏது என்று, எனக்கு நீ உபதேசம் செய்ய வேண்டும். ..


தேசம் புகல வயிலே யெனச்சிறை புக்கொருகந்
தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குப
தேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந்
தேசம் புகல கமுதவி மானைச் செருச் செய்வதே. 45


ஐந்து தலையில் ஒரு தலையை, இழந்த, பிரம்மன், எனக்கு உறைவிடமும், அடைக்கல ஸ்தானமும், வேலாயுதமே என்று முறையிட, மரக்கலங்களும் அழகும் நிறைந்த, உக்கிர குமார பாண்டியனாக வருணன் ஏவிய கடலை வற்றச் சேய்தவனும், பரமசிவனுக்கு, பிரணவ உபதேசம் செய்த, சிறந்த மொழியை உடைய கந்தக் கடவுள், கொஞ்சங்கூட அறிந்தானில்லை, பிரகாசம் பொருந்திய மாம் பூவாகிய அம்பு, காமக் கலக்கத்தை ஏற்படுத்தி, மான் போன்ற தலைவியுடன், போர் புரிகின்றதை, (சிறிது ஓர்கிலன்) ..


செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்
செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல்
செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு
செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே. 46


போர் புரியும் திறமும், மத்தகமும், கோபமும் உடைய, அயிராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்ட, தேவசேனையின், மணம் வீசுவதும் இறுமாப்பும், பூந்தாதுகளும் உடைய, தன பாரத்தில், மூழ்கும், கடப்ப மாலை அணிந்த முருகனே, இவ்வுலகத்தில் (வினையால் ஏற்படும்), பிற சமய நூல்களின் கர்வத்தை, வெல்லுகின்ற, வேதாகம நூல்களை, சிருஷ்டித்தவனே, தாமரை மலர்களில் உதித்த பிரம்மாக்களும், அழிந்து, தேவர்களின் சா£ரத்தை விடுகின்ற, உகாந்த காலத்திலும், நான் நித்யத்வம் அடையும் பொருட்டு, இப்பிரபஞ்சத்தில் முடிவான பொருள் எது என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும். ..


திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோ
திடம்படு கத்துந் திரித்தம்பு வாலி யுரத்தும்பத்துத்
திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்ம
திடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே. 47


உறுதிநிலை அழியும், யுகாந்த காலத்திலும், அழிவில்லாமல் இருப்பீர்கள், பூர்வ வினையால் நமக்கு ஏற்படும், இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும் ஈஷனாத்ரயங்களையும் (மண், பெண், பொன்), ஓயாமல் சோதிட நூல்களை பார்த்து, சதா பிதற்றுவதையும், மாற்றி, தன்பாணங்களை, வாலியின் மார்பின் மீதும், இராவணனுடைய உறுதியான பத்து தலைகளின் மீதும், பிரயோகித்த ஸ்ரீராமனின், மருமகனே, பகை கொண்ட, முப்புரங்களையும், தான் தோன்றிய இடத்திலேயே, விழுந்து அழியும்படி, உயர்ந்த மேருமலையை, வளைத்த சிவபெருமானின், மைந்தனே, என்று துதியுங்கள். ..


சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே. 48


அழகுடனும், மிகுந்த காதலுடனும், கானாறு பாய்கின்ற, வள்ளிக் காட்டில் வாழ்ந்த, வள்ளியுடன், காந்தர்வ மணம் புரிந்த, செந்தில் குமரக்கடவுளே, வலிமையில் மேம்பட்ட, பகைமை உடைய, இராக்கதர்களை அழித்தவனே, செந்நிறமான தெய்வமே, என்று துதித்தால், செவ்வாய், புதன், சந்திரன், பிரகஸ்பதி, வியாழன், ஆதித்தன், அவனுடைய பிள்ளையாகிய சனீஸ்வரன், (இவர்களின் வக்கிரத்தால் ஏற்படும்) நமது சித்தத்தை மாறுபடச் செய்யும், தீமை இல்லாது போகும். ..


சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார்
சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள்
சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச்
சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே. 49


தனது ஐந்து சிரங்களில் ஒன்றை இழந்தவரும், மற்ற தேவர்களைக் காட்டிலும் நிலையான வாழ்க்கையை உடையவருமாகிய, ஆதி காடவுளுமாகி பிரம்மனும் அவனின் பிதாவாகிய திருமாலும், அடிமுடி தேடி கண்டு பிடிக்க முடியாத பரமசிவனின், குமாரனே, நல்ல முறையில் ஒலி செய்யும், சதங்கை, சிரேஷ்டமான, மணிகள், வெட்சி மாலை (இவைகளை எல்லாம் அணிந்த), அழகிய உனது திருவடிகளில், சிவந்த என் இருதயம், தியானித்து ஒருமைப்படும்ப, எனக்கு அருள வேண்டும், தற்போது, முன் செய்த தீ வினையாகிய, சேற்றில், கரை சேறுவதற்கு வழி தெரியாமல், உழலுகின்ற, இச் ஜீவ வாழ்க்கை, பொய்யானது. ..


சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவா
சித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி
சித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுத்தி
சித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே. 50


பொய்யாக உள்ள, நாம் காண்கின்ற கனவைப் போன்றது, இந்த பிரபஞ்ச வாழ்க்கை, என்ற மன உறுதியை நல்கும், தவ சித்திகளின் வலிமையை (நாடாமல்), மன்மதனுடைய காம நூல் வழியில், கெட்டுப்போன எனக்கு, இனிமேலாவது, வெட்சி மாலை அணிந்த, சிறந்த, அற்புதமான அழகுடைய, பெருத்த தனபாரமுடைய, மயில் போன்ற வள்ளியின், மணாளனே, இந்த பிறப்பாகிய பந்தம் நீங்க, மோட்சப் பேறானது பரிபூரணமாக கிட்டும்படி, எனக்கு அருள வேண்டும் ..


சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ் சிலம்பம்புரா
சிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வா
சிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வா
சிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே. 51


கொண்டையையும், தூவியையும் உடைய, பெரிய, மயிலை வாகனமாக உடையவனே, கிரவுஞ்ச மலையையும், முழங்குகின்ற, சமுத்திரத்தினிடத்தில், ஒழுங்கான, மேல் கிளைகளை உடைய, மா மரமாக நின்ற சூரபத்மனையும், இருளுக்கு இடமாகிய மாயையும், விலக்கி, போர் செய்து, நான்கு முகத்தை உடைய பிரம்மன், பிரணவப் பொருள் தெரியாமல் வேதத்தைக் கற்ற குற்றத்திற்காக, அவனைக் கோபித்து, பெரும் மகிழ்ச்சியை, அழகுக்கு இருப்பிடமான, தேவ லோகத்தில், விளைவித்தவனே, கொடிய போரில் வல்லவனாகிய (பாண்டிய மன்னனின்), குமாரியின்*, குதிரை முகத்தை, தீர்த்தவனே, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, மயிலைப் போன்ற அழகுடைய தேவயானையின், கலவி இன்பத்தை விட, நக்கீரர் சொல்லிய திருமுருகாற்றுப்படை, உனக்கு இனிமையாக இருந்தது போலும். ..


தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத்
தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத்
தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க் குஞ்சிதைதோல்
தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீவிலங்கே. 52


தித்தி தொந்தி என்கிற தாள வரிசைகளுக்கு ஏற்ப, நடனம் புரிகின்ற, சிவபெருமானின், செவிகளாகிய, வரிசையான புலனிடத்து, நுழையும்படி, பிரணவப்பொருளை, அச்சிவனின் கலக்கம் ஒழியும்படி, உபதேசம் செய்த, குமாரனே, தேன் பண்டங்களின் இனிமையினால், இனிப்புற்று இருக்கும், வயிற்றை உடைய (கணபதிக்கு), தம்பியே, கருப்பையில் உண்டாகிற ஜீவனுக்கும், அழிந்து போகிற, தோலாகிய இந்தப் பைக்கும், சம்பந்தம் ஏற்பட்டு பிறப்பு உண்டாவதற்கு, காரணம், நான் முப்பிறவியில் செய்த, கருமங்களாகிய, கொடிய தளைகள் தானோ? ..


தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிரமுந்நீர்
தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற்றவான்
தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந்
தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே. 53


கரத்தில் அக்னியையும், தோளில் வில்வ மாலையையும், சிரசின்கண் கங்கா நதியையும், புனைந்திருக்கும் சிவபெருமானின், பாலகனே, இருண்ட, (ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர்) இவைகளால் உண்டாகிய சமுத்திரம், வரண்டு போகும்படி, வில் வித்தையை காண்பித்த, வல்லவராகிய*, ராமச்சந்திர முர்த்தியின் மருகனே, அறிவதற்கு அரிதாகிய, பெரிய தீவுகளிலும், வேறு பல இடங்களிலும் பஞ்சேந்திரியங்களினால், இச்சையினால் உந்தப்பட்டு, பல புலன் நுகர்ச்சிக்காக, அலைந்து திரிகின்ற, புத்தியின், பலத்த தொடர்ச்சியை, நீ ஒழிக்க வேண்டும், எமன் தொடர்ந்து என்னைப் பிடிக்காமல், உனது திருவடியில் நான் நிலைபெற வேண்டும். ..


திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே. 54


திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும். ..


தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந்
தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந்
தீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத்
தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே. 55


கொடியனவற்றையே கற்கின்ற ஏ மனமே, தீமை மாத்திரமோ இறப்பும் ஒழிந்து போகும், பிறவியும் நீங்கும் (ஆதலால்), குற்றத்திற்கு, இடம் ஆகிய, கடலின் கண், அசுர சேனை அனைத்தையும், தகித்த, கை வேலை உடையவனே, கருணா மூர்த்தியே, வேள்வி முடியும் காலத்தில் வேதியர்கள் எல்லோரும் திரண்டு கொண்டு ஒரே மாதிரியாகிய உச்ச குரலில் சுப்ரமண்யோம் என்கிற மந்திரத்தை முழக்கி வணங்குகின்ற, முத்துக்குமரனே, இந்த, வேள்வியில் கொடுக்கப்படும் அவிர் பாகத்திற்கு, உரிமையை உடையவனே, குறிஞ்சிக் கடவுளே, என்று துதிப்பாயாக, உன் சித்தம் அழகு பெறவே. ..


தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்
தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்
தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னத்
தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே. 56


தென்னஞ் சோலைகளும், மேகங்கள், கவிந்து கொண்டிருக்கும், திருத்தணி, பரங்குன்றம், திருச்செங்கோடு என்னும் மூன்று மலைகளுக்கு அதிபனே, கையில் சூலத்தைப் பிடித்திருக்கும், தென் திசைக்கு அதிபனாகிய எமராஜனின், உடல், அழியும்படி, காலால் நீட்டி உதைத்த பரமசிவனின், குமாரனே, முன்னொரு காலத்தில், பின் முதுகில் கூனுடைய, பாண்டியனின் உடல் கூனை, நன்மையே பயக்கும் விபூதியினால், சரி செய்து நிமிர்த்தியது போல, இப்போது, வனப்புடைய, மன்மதனின், அழகிய, கையில் பிடித்த கரும்பு வில்லின், வளைவையும், நீக்கி, அந்த மன்மதன் என்மேல் பாணத்தை எய்தாதபடி நீ அணிந்திருக்கும் மாலையை தந்தருள வேண்டும். ..


தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத்
தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவே
தீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல்
தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே. 57


கிரணங்களை உடைய சூரியன், சஞ்சாரஞ் செய்யும், அழகிய ஆகாச வெளியையும், கடந்து சென்று, தன் பிள்ளையாகிய பிரம்மனும், பயந்து வணங்கும்படி, திரிவிக்ரமவதாரத்தில், பாதத்தை ஊர்த்தவ தாண்டவமாய் எடுத்த மகாவிஷ்ணுவும், கடலும், அலறி அபயமிட, மாமரமாகிய சூரனால் உண்டான துன்பத்தையும், தீமையையும், முழுவதும், நீங்கும்படி ஒழித்து, அடியா¡ர் கூட்டம், செழிக்கும்படி, விண் உலகத்தையையும், காப்பாற்று என்று, சிரசின்கண், கங்கா ஜலத்தை சூடியிருக்கும் பரமசிவன், சொல்ல, அவரை வணங்கி அந்த வேலையை செய்து முடித்த, கூரிய வேலாயுதத்தை, கையில் ஏந்தி இருக்கும் முருகப் பெருமானே, குருவாகி அந்த சிவனுக்கு, பிரணவப் பொருளை உபதேசித்த நற்குணக் குன்றனே. ..


சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி
சீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு
சீலங் கனமுற்ற வேதனை மேவித் தியங்கினஞ்சீ
சீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே. 58


கொடைக் குணத்திலும், பெருமையிலும், மேம்பட்ட, குறை இல்லாதவனே, சமுத்திரத்தில், கோபமுடைய, அசுரராகிய இருள் கூட்டத்தை, அழித்தவனே, முற்றமான கடர்க்கரையின்கண், முத்துக்கள் நிறைந்திருக்கின்ற, செந்திற் பதியானே, மயில் வாகனமுடைய, அழகிய பரிசுத்த மூர்த்தியே பசியாகிய உதரத்தீயினால், ஏற்படும், துன்பத்தை அடைந்து, மயக்கமுற்றிருக்கிறேன், இது மிகவும் இகழ்ச்சியான, முழுவதும் இழிவான நிலை (அதலால்), இப்படிப்பட்ட ஜனனத்திலே, இனி மேலும், என்னைக் கொண்டு போய்த் தள்ளுவது, நன்று ஆகாது. ..


சேர்ப்பது மாலய நீலோற் பலகிரித் தெய்வவள்ளி
சேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச்
சேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன்
சேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே. 59


நெருங்கி இருக்கும் தாமரைகளும், அசைகின்ற, ஜலத்தின் கண், நீலோற்பல புஷ்பங்கள் மலரும், திருத்தணி மலையில் வாழும், தெய்வீக சக்தியாகிய, வள்ளி நாயகனே, தும்மல் ஏற்பட்டது, இறந்து விட்டார், என்று, பலரும் ஆச்சரியத்துடன் சொல்வதற்கு முன், உஷ்ணம், சிலேத்துமம், மயக்கம், ஜாக்ரத், சொப்னம், சுசுத்தி, துரியம், துரியாதீதம் என்ற ஐந்து அவஸ்தைகளும், நிரம்பி இருக்கும், இந்த உடல், அழிந்து போவதற்கு முன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் இவர்கள், போற்றி வணங்கும், சிறந்த உன் திருவடித் தாமரையில் என்னைச் சேர்த்தருள வேண்டும்). ..


செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னஞ் செல்வர்க்கிடச்
செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்
செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்
செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே. 60


தனது மனைவியைக் கூட, பகைவர்கள் அபகரித்துக் கொள்ளும் முன்பு, தனவந்தர்களுக்கு, நடுநிலைமையுடன், மற்றவர்களுக்கு தானம் கொடுத்து கொடுத்து, சிவந்து போன, கை வாய்க்கப் பெறாவிடில், அவர்கள் எப்படி நல்ல கதி அடைவார்கள், தெய்வீகமாகிய கணபதி, புகழ்ந்து பேசிய, தம்பியே, தில்லை நடராஜராகிய, ஒளி பொருந்திய நெற்றியில் முன்றாவது கண்ணை உடையவரும், ஆகாசத்தில், வெள்ளி, செம்பு, தங்கமான, மதிலை உடைய திரிபுரத்தை, ஜெயித்த பரமசிவனின், மைந்தனே, தேவயானையின் தலைவனே. ..


திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந்
திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ
திக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத்
திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே. 61


தெய்வயானையின் மணாளனே, சமுத்திரத்தின் கண், திருச்செந்தூரில் விளங்கும், முத்தின் கொழுந்தொளி போன்றவனே, முன்னொரு காலத்தில், அஷ்ட திக்கு பாலர்களும், ஆட்டை நிலையான வாகனமாக உடையவனும், சிவபெருமானிடத்தில் சென்று, அரனே, உமாதேவியை இடப்பாகத்தில் வைத்திருப்பவனே, திதியின் பிள்ளைகளான சூரபத்மாதி அசுரர்களால், எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, எப்படித் தாங்கி பிழைப்போம்? என்று முறையிடுகையில், அவர் உனக்கு அளித்த, அடியவரின் இடரை நீக்குவதையே நெறியாகக் கொண்ட, கை வேலாயுதத்தை, நீ அவர்கள் மேல் எய்தி அவர்களை அழித்திராவிடில், அந்த தேவர்கள் எப்படி பிழைத்திருப்பார்கள்? ..


திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந்
திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித்
திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னே
திலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே. 62


தேவயானையின் பல்லாகிய, இனிய, முத்தானது, செலுத்துகின்றதும், தன்னால் நுகரப்பட்டதும் ஆன, அதரபானமாகிய அமுதத்தால், மனம் குழைந்த, உள்ளம் உடையவனே, கண்ணுக்குத் தெரியாமல் எள்ளில் எண்ணெய் விரவி இருந்தும் அது எள்ளை அரைக்கும்போதுதான் வெளி வருவது போல, சராசலமெங்கும் நீக்கமற நிறைந்து கொண்டு ஆனால் பக்தியினால் வெளிப்படும் போது மட்டும் நேரே தெரிகின்ற, செந்திலாண்டவனே, ஆயுத வகையில் முதன்மை ஸ்தானத்தை வகிக்கும் வேலாயுதத்தை ஏந்தியவனே, கந்தக்கடவுளே, என்று துதித்து ஓலமிடாமல், உன்னிடம் பக்தி இல்லாத மாற்றார்கள் போல், முற்பிறவியில் சம்பாதிக்கப்பட்ட, பெரிய தீவினைகளை நான் அடைந்து, வருந்தி உழல்வது, என்ன காரணம்? ..


தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர்
தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத்
தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநி
தியங்காப் பொறியுண்டை பண்டுயப் போர்செய்த சேவகனே. 63


சங்க நிதி பதுமநிதி இவைகளும், கற்பக விருட்சமும் ஆக விளங்கும், செல்வத்தினை உடைய பொன்னுலகு, முன்பு அழியாமல் பிழைக்கும்படி, நிலை பெற்ற கிரவுஞ்ச கிரியை, போரில் வென்று அழித்த, முழு வீரனே, சற்றும் கலக்கமில்லாத, ஐம்புலங்களை உடைய, இந்த தேகம், அந்திம காலத்தில் அக்கினியில் வெந்து போவதும், எருமை வாகனமுடைய எமதூதன் (என்னை எமபுரத்திற்கு கொண்டு சென்று) வாயைத் திற, சற்றும் தவம் செய்யாத பாவியே, (கருணை இல்லாமல் பிராணிகளை கொன்று சாப்பிட்ட பாவத்திற்காக) தீப்பொறிகளைச் சாப்பிடு, என்று கூறப்போவது, உண்மை ஆதலால், பிரம லிபி என் தலையில் எழுதப்பட்டு, பிரம்மன் என்னை மீண்டும் சிரிஷ்டிக்காதபடி என்னைக் காத்தருள வேண்டும். ..


சேவக மன்ன மலர்க்கோமுன் னீசொலத் தெய்வவள்ளி
சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்
சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்
சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே. 64



தெய்வீகம் பொருந்திய வள்ளியின், (கருணையினால்) சிவந்த, இதய தாமரை போல் விளங்கும், முகார விந்தம் உடையவனே, கிரவுஞ்ச மலையை அழித்த ஒப்பற்ற வீரனே, தலைவனே, பழனிப் பதியானே, ரிஷப வாகனத்தின் மேல், நிலைபெற்று வரும், குற்றமற்ற பரிசுத்தரான சிவபெருமானுக்கு, முன்னொரு காலத்தில், நீ பிரணவ உபதேசத்தை செய்ய, வேதம் ஓதுவதில் வல்லமையும், அன்ன வாகனத்தையும் உடைய, பிரமனுக்கு, எதனால், வெட்கத்தை அடைந்து, பொருள் தெரியாமல் மயங்கி நின்றது? ..


திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய
திகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய
திகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி
திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ் சீகரமே. 65



என் உயிர் போன்ற இந்தப் பெண், விழிகளில் நீர் சொரிந்து கொண்டு, மயங்கி நிற்கிறாள், செந்திலாண்டவன், தன்னுடைய திருத்தோள்களை, எனக்குக் கொடுத்து அருள மாட்டார் என்கிறாள், சந்திரனை, தினமும், வெறுத்து பேசுகிறாள், தான் இப்படி அரற்றி வருந்துவதைப் பார்த்து, மன்னித்து ரட்சிக்க மாட்டேன் என்கிறார் என்று சொல்லுகிறாள், பாண்டிய மன்னனின், சுர வருத்தத்தின், கொடுமை நீங்க, தேவாரப் பதிகத்தைப் பாடி அருளிய, சம்பந்தப் பிள்ளை என்று கூறுகிறாள் (ஆதலால்), பிரமனின், கையினால் சிருஷ்டிக்கப்படுகின்ற உடலுக்குள், இந்த ஆன்மா சேர்க்கபட்டு மீண்டும் பிறவி அடையாதபடி, ஆண்டு கொள்ள வேண்டும், என்னுடைய சுவாமியே அழகிய குமாரக்கடவுளே. ..


சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ
சீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு
சீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு
சீகர சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டிகொண்டே. 66



அலைவீசும், கடலின் கண், பெரிய போர் வீரனான, கொடிய, சூரபத்மனை, ஜெயித்தவனே, தோள்களை, விரும்பி அணைப்பதில் பிரியமுள்ளவளும், நெற்றியில் திலகம் தீட்டியவளுமான, கொடி போன்ற வள்ளிநாயகிக்கு உரிய, அலங்காரமுடையவனே, சிவகுமாரனே, பரிசுத்தமான அக்கினியால், பொறி ரூபத்தில் ஏந்தப் பட்டவனே, ஐராவதத்தையும், மேகத்தையும், வாகனமாக உடைய இந்திரனின், சிறையை மீட்டுக் கொடுத்த, பரிசுத்த மூத்தியே, வலிய, மயக்கத்தைத் தரும், இருவினைகளாகிய மலையை, மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிதற அடித்து விடு. ..


சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திதிபுத்ரரா
சிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச்
சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ்
சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே. 67



மயில் வாகனத்தை, தாவிச் செலுத்தும்படி, ஆர்பாரிக்கும், கடலின் கண், செலுத்தி, அந்த வீரம் வாய்ந்த, திதி தேவியின் பிள்ளைகளாகிய அசுர கூட்டங்களை, கோபித்து அழித்தவனே, தந்தம் உடைய, பாம்பு போன்ற நாகாசல வேலவனே, தெய்வீகமாகிய, குறப்பெண்ணாகிய வள்ளி தேவியை, பார்த்து, பணிவுடன், உன் மலர் போன்ற கைகளை, தலைக்கு மேல் கூப்பிக் கோண்டு, ஏ பெண்ணே உன்னுடைய இடுப்பு, புகழ்ந்து கூறப்படும், வஞ்சிக் கொடி போன்ற உருவம் உடையது, உன் விழி, நிலைபெற்ற, ஆபத்துக்களை எல்லாம், அகற்றி என்னுடைய ஆசை அக்கினியைத் தணிப்பதால், நான் செய்த தவத்தின் பயனே ஆகும், என்றெல்லாம் புகழ்ந்துரைத்த தலைவனே. ..


சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத
சேகர வாரண மேவும் புயாசல தீ வினையின்
சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார்
சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே. 68



அடியவர்களை பின் வாங்குதல் இல்லாத, போர் செய்வதில் வல்லமை உள்ள வேலாயுத மூர்த்தியே, வள்ளி நாயகியின், தாள்களை சிரத்தில் ஏந்தியவனே, தேவயானை, தழுவும், மலை போன்ற தோள்களை உடையவனே, (அடியார்களின்) கொடிய வினையின், வஜ்ரம் போன்ற திடத் தன்மையை, அரம் போன்று பொடி செய்பவனே, வேதங்கள் பூஜிக்கும் செங்கோட்டு மலைக்கு அதிபனே, தினந்தோரும், முக்கண்ணுடைய சிவபெருமான், மால் விடையாகிய திருமாலின், கையிலிருக்கும், பாஞ்ச சன்யம் என்ற சங்கிற்கும், உன் கையில் இருக்கும், கொடியாகிய கோழிக்கும், (உன்னைச் சேர்ந்திருக்கும் இரவு காலம் நீடிக்காமல் பொழுது புலர்வதை தொனி செய்து காட்டும் சங்கும், அதே போல் சேவல் காலைப் பொழுதை வரவழைக்க கூவுவதாலும்) இரண்டிற்கும் உயிர் ஒன்றாக இருக்குமோ? ..


சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச்
சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்வேள்
சீவன சத்துரு செய்யாண் மருகவெ னாதிடையே
சீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே. 69



பிராணனுக்கு, (நித்யத் தன்மையும் மாறுபடாத தன்மையும் இல்லாததால்) அசத்தாகும் (ஆதலால் பிராணனும் உடலும் சேர்ந்திருக்கும் பொழுதே), நெஞ்சை உருகவைக்கும் பக்தியினால், (சத்து எது என்று தெரிந்து கொண்டு) இந்த ஜென்மம் ஒழியும்படி, சகல ஜீவன்களுக்கும் மூலகாரணராகிய சிவபெருமானால், ஆட்டு வாகனமுடைய, உஷ்ணமுடைய, உடம்பை உடைய அக்னி தேவனின், கரத்தில் கொடுக்கப்பட்ட (பொறியாய் இருக்கும் போது), குமாரக்கடவுளே, ஒளிவீசும், தாமரையை இருப்பிடமாகக் கொண்ட, சிவந்த நிறமுடைய மகாலட்சுமிக்கு, மருகனே, என்று சித்தத்தில் வைத்து நிலை பெறச் செய்து தியானிக்காமல், ஒரு பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே, ஜீவனானது (சத்தாகிய பரமாத்மாவையும் அசத்தாகிய ஜீவாத்மாவையும் அறிந்து கொள்ளாமல்), ஜடமாகிய, மலபாண்டமாகிய தேகத்தை, அடைந்து, அதற்கு ஏற்கத் தகாத பெரிய பழியை, என் இதயம் எண்ணிக்கோண்டு, அவமே காலத்தைப் போக்குகிறது. ..


சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச்
சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ்
சிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சா
சிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே. 70



கோலம் தீட்டிய, இந்த அழகு, நிறைந்திருக்கின்ற, புள்ளியை உடைய முகம் பொருந்திய, தேய்வீகமாகிய ஐராவதத்தினிடை வளர்ந்தவளும், அற்புதமான அழகை உடையவளும் ஆகிய, கொடி போன்ற தேவயானைக்கு இன்பம் பயப்பவனே, செந்திற்பதியானே, கிரவுஞ்ச மலையை, சிதற அடித்த, வலிமையை உடையவனே, ஞானா மூர்த்தியே, (முதலில் இவன் மோட்சத்திற்கு தகுதி உள்ளவனா என ஆராய்ச்சி செய்துவிட்ட பிறகு இவன் தக்கவன் என அறிந்தவுடன் தாய் போல் அருள் செய்து) முத்தி வீட்டை அடையச் செய்தவனே (ஆய் .. ஆராய்ச்சி, ஆய் .. தாய்). கடல் ஓயாமல் முழங்குகிறது, இந்த இடத்தில் பிறைச் சந்திரனும் சூரியனின் காந்தி போல் தகிக்கிறது. ..


திங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிரு
திங்களு மாசுண மாக்கும் பதாம்புயன் செந்திலன்னாள்
திங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந்
திங்களு மாசுண நன்றான மாற்றமுந் தீட்டினன்றே. 71



சந்திரனையும், பாம்பையும், தரித்திருக்கும் சிவபெருமானின், குமாரனும், என் பத்து மாதமென்னும் கால அளவையில் சேர்ந்து அன்னையின் கருப்பையில் படும் பிறவித் துன்பத்தையும், மிகவும் நீறாக்கும், (சுணம் சுண்ணாம்பு), தாமரை போன்ற தாள்களை உடைய குமாரக்கடவுளின், செந்தில் பதியைப் போல, ஒத்து விளங்குகின்ற (இந்த மங்கையின்), தீமைகளை, உண்டாக்கும், ஜீவ ராசிகள் செய்யும் பாவங்களாகிய குற்றங்களை, ஆராய்ந்து பார்க்கும், எமனைப் போல, கண்ணையும், செழிப்பான கரும்பும், இனிய, தேனும், ஓப்பு இல்லாததால் குற்றம் வரும்படி செய்கின்ற, இனிமையான மொழியும், உன்னால் மடல் எழுத முடிந்தால், நன்மையாகும். ..


தீட்டப் படாவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில்
தீட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத்
தீட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள்
தீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே. 72



ஏ நான்முகனே, இனிமேல், உன்னாலே, என் தலை மேல் விதியாகிய லிபியை, எழுத வேண்டிய வேலை கிடையாது, ரத்தம் முதலிய கறைகள் சேர்ந்த, இந்த ஜனனத்தில், அசூசி அடைந்திருக்கின்ற, மற்ற ஜீவன்களைப் போல, நான் ஆக மாட்டேன், (ஏனெனில்) எட்டு திசைகளிலும், தன்னுடைய நான்கு கொம்புகளையும், கூர்மை செய்கின்றதும், அந்த முகப் படங்களையும், அதிலுள்ள வித்திர எழுத்துக்களையும் கொண்ட, முகத்தை உடைய மலை போன்ற ஐராவதத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின், சிறையை மீட்டின கந்தக் கடவுளின், திருவடிகளை அடைய, என்றும் அழிவில்லாத இந்த தெய்வத்தையே, உள்ளத்தில் தியானித்திருக்கிறேன். ..


திசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவ
திசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போ
திசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந்
திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே. 73



நான்கு திசைகளிலும் முகத்தையுடைய, வேதத் தலைவனாகிய பிரம்மனும், அவரது தந்தையாகிய திருமாலும், சூரியனும், சந்திரனும், தங்கள் தங்கள், ஆயுள் முடிந்து, இறந்து போகும், யுகத்தில் துன்பமடையும் காலத்திலும், அழிய மாட்டார்கள், கோபித்து ஆரவாரம் செய்கின்ற, கடலின் கண் தோன்றி, அழிவைக் காட்டும் முகத்தை உடையவனும், தேவர்களுக்கு அழிவில்லா துன்பத்தை விளைவித்தவனுமான சூரனை, ஜெயித்து அழித்த, வேலாயுதத்தை உடைய முருகன் வசிக்கும், தினைக் காடுகளையும், யானைகளின், கூட்டங்களையும், தன்னுடன் பொருந்தி இருக்கும், குளிர்ந்த, மேகங்கள் தவழ்கின்ற பழமுதிர் சோலை மலையை, அடைந்து இடைவிடாது தியானிப்பவர்களே. அழிய மாட்டார்கள்). ..


சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச்
சேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன்
சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான்
சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே. 74



சேர ராஜனின், கொல்லி மலையையும் வெள்ளி மலையையும் போன்ற, வள்ளி மலைக்காட்டில் வாழ்கிற, இனிய மொழிகளை உடைய வள்ளி நாயகியின், காதலனே, அலையானது, கடற் கரையை, அழிக்கும்படி, மோதுகின்ற, ஒப்பற்ற உப்புக் கடலை, வற்றும்படி வேலைப் பிரயோகித்த, சாமர்த்தியனே, சூரனை, கிரவுஞ்ச கிரியுடன், அடியோடு, போர் செய்து அழியும்படி, ஜெயித்து, தேவர்களால் துதிக்கப்பட்ட, மகா வீரனே, ஆகாச கங்கையை, ஒன்றாக, சடை மேல், அடக்கி தரித்த பரமசிவன், செய்த தவத்தால் அவதாரம் செய்தவனே. ..


செய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ்
செய்தவத் தாலஞ்சு கம்பெறச் சேயுரைக் கேற்றுருப்போய்ச்
செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையே
செய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே. 75



முன்பிறவியில் செய்த தவத்தினால், சீரிய பஞ்சாட்சரத்தை (உபதேசம் பெற்று), துதிக்கின்றோம் இல்லை, தீமை விளையும், நரக பூமி, அழிந்து போகவும், பூவுலகம், நன்மை பெறவும், சம்பந்தராய் அவதரித்து அருளிச் செய்த தேவாரப்பாட்டினால், ஆண் உருவம் நீங்கி, சிவந்த, அந்தப் பெண்ணுருவாகிய பனை, இனிய பழத்தை, கொடுத்தது என்று சொல்லி துதிக்கவும் இல்லை (ஆதலால்), தீமைகளை செய்துகொண்டு, மூன்று மலங்களாகிய, போர்வையை தரித்துக்கோண்டு, ஏற்பட்ட துன்பத்தால், நடுக்கமுற்று பயந்து கொண்டிருக்கின்றோம். ..


செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற்
செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச்
செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய்
செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே. 76



சிவந்த கிரவுஞ்ச கிரியையும், சங்கினங்கள், உலாவுகின்ற, சமுத்திரத்தின் கண், மா மரமாய் நின்ற சூரபத்மனை ஜெயித்த, வலிய படையாகிய, வேலாயுதக் கடவுளை, வளப்பமான சேவல் கொடியை உடைய குமாரக் கடவுளை, புகழ்ந்து பாடுவதற்கு நினைத்து, மனதைப் புதைத்து விடாதே மூடுதல், செம்மல் மூடாதே), குற்றம் நீக்கப் பட்ட, அழகிய தமிழ்ப் பாட்டுக்களை இசைக்கும் பாணனே, தெளிவாகவும் இனித்திருந்தும், கைக்கு அருகில் வாய்த்திருந்தும், பழைய பூவை, சுரும்பினங்கள் (வண்டு இனங்கள்), இச்சிக்குமோ? இந்த உண்மையை, நீ ஆராய்ந்து பார்த்து, அந்த முருகனையே நீ புகழ்ந்து பாடுவாயாக. ..


தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான்
தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால்
தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத்
தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே. 77



தேவர்கள் கூடி நிர்மாணித்து கொடுத்த ரதத்தை, அச்சு முறியும்படி பண்ணி, திருமாலாகிய ரிஷபத்தில் ஏறி, திரிபுரங்களையும் சிரித்து அழித்த, பெருமானாகிய சிவனுக்கு, பிரணவப் பொருள் தெரியும்படி உபதேசித்த, சுவாமியே, சொல்லத் தகும், தேவர்களைத் துன்புறுத்தி சிறையிலிட்ட குற்றத்தை, தரித்திருந்த, சூரனை அழித்தவனே, என்று துதித்து பாடுங்கள், காம இச்சையால் விலைமகளிரிடம் சென்று, தவளையானது, விஷப் பாம்பின், வாயில் சிக்கிக் கொண்டது போல, அந்த பரத்தையர்களின் வலையில் சிக்கிக் கொண்டு, பேய்த் தேரையாகிய கானல் நீரை, ஊறுகின்ற ஜலமானது, பக்கத்தில் இருக்கிறது என்று நினைத்து ஓடி ஓடிப் போய் வருத்தப்படுகின்ற மக்களே. ..


திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத்
திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத்
திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ
திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே. 78



எப்போதும் திரிவாயாக, கடல் சூழ்ந்த, உலகை சிருஷ்டிக்குமாறு, பூர நாளில் அவதரித்த பார்வதி தேவியை, தனது உள்பாகமாகிய இடது கையால் மேருவாகிய வில்லைப் பிடிக்கச் செய்து, திரிபுரங்களின் மேல், விஷ்ணுவாகிய பாணத்தை, பிரயோகம் செய்யும் பொருட்டு, தனது பாகம் ஆகிய வலது கையால் ஏற்றிட்ட, மகா வீரனாகிய பரமசிவனின், திருச்செங்கோட்டு மலையை வாசஸ்தலமாகக் கொண்ட, அந்த சாமர்த்தியசாலியான மைந்தனே, திருமாலின் மருகனே, திருக்கை என்னும் மீன் இனங்கள் வாழும், சமுத்திரத்தில், பகைவர்களாகிய அசுரர்களின் ரத்தத்தையே புதிய உறையாகக் கொண்ட, வேலாயுதனே, என்று புகழ்ந்து கொண்டு ஏ நெஞ்சமே என்றும் திரிவாயாக). ..


செப்பா ரமுதலை மன்னோ திகனங் குரும்பைமுலை
செப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண்
செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான்மருகன்
செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே. 79



பேசுகின்ற மொழி, இனிய அமுதம் போன்றது, இருண்ட நிறமும், அழகும், நிலை பெற்றிருக்கும், கூந்தல், மேகம் போன்றது, தென்னங் குரும்பை போன்ற தனபாரம், சிமிழைப் போன்றது, முத்துக்கள் நிறைந்த, பழமையான சமுத்திரம் போன்றது, இவளுடைய கண், ஓளிவீசுகின்ற பல் வரிசை, மயில் இறக்கையின் அடிப்பாகம் போன்றது, நான்கு கண்களை உடைய, சிவந்த பெரிய முதலை (யின் வாயில் சிக்கிய), (கஜேந்திரனைக் காப்பாற்றும்பொருட்டு) தடாகத்திற்கு, விரைந்து சென்ற திருமாலின் மருகனும், தன்னை மிகவும் புகழ்ந்து பாடியவர்களின், பிறப்பிற்கு மூலமான வினைத்தொகையை, அடியோடு நிர் மூலமாக்கும் கந்தக் கடவுளின், மலையில் வாழும், இந்தச் சிறந்த பெண்ணிற்கு. ..


சீராம ராம சிவசங்க ராநுந் திருமுடிக்குச்
சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற்
சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச்
சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே. 80



லட்சுமி நாயகனாகிய, அழகான, திருமாலே, பரம சிவனே, உங்கள் சென்னிக்கு, அழகாக அமைந்திருக்கின்றன, கங்கா ஜலமும், சரப் பாபரணமும், தேன்விளங்கும் துளசி மாலையும், என்று உலகில் சொல்லுவார்கள், தெள்ளிய அலைகளை உடைய கடலின்கண், மா மரமாய் நின்ற சூரபத்மாவின், மார்பைத் துளைக்கும்படி, உடை வாளை, பிரயோகித்த, குமாரக்கடவுளின் திருவடிகளுக்கு, அணிகலமாக அமைந்திருப்பவை, நெருங்கிய, நிலை பெற்ற, தேவர்களின், கி¡£டமணிந்த, தலைகளின் வட்ட வடிவமான வரிசைகளே. ..


சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ்
சிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலரா
சிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ்
சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே. 81



மயில் வாகனனே, அடியார்களிடத்தில், இன்னருளைக் காட்டும், சிறந்த வேலாயுதத்தை உடையவனே, இலஞ்சிப் பதிக்கு அதிபனே, என்னை இழி சொற்களால் பேசும், இந்த ஊர் மக்களும், மன்மதனும், முத்துக்கள் நிறைந்த சமுத்திரமும், சோலைகளும், சந்திரனும், கட்டிலும், இரவில் ஒலிக்கும் புல்லாங்குழல் ஓசையும், என்னைப் பெற்றெடுத்த இனிய மொழியை உடைய, தாயாரின், காவலும், பெரிது அல்ல, காமச்சின்னமாகிய அன்றில் பறவையும், காமனின் தேராகிய தென்றல் காற்றும், கொடிய குதிரை முகத்தை உடைய, வடவாமுகாக்னியைப் போல என்னை வருத்துகின்றன. ..


தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே. 82



வண்டுகள் இசை பாடுகின்ற, சென்னியின் கண், கங்கா ஜலத்தை, தரித்திருக்கும் பரமசிவனின், மைந்தனே, இருளின் நிறம் கொண்ட, கடலால் சூழப்பட்ட, அழகிய, பூமா தேவிக்கும், தாமரையில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும், தலைவனாகிய திருமாலின், மருகனே, வளமையான வேதங்கள் எல்லாம், பூஜிக்கும், தெற்குத் திசைக் கண் இருக்கும், சிறந்த, சர்ப்பம் போல் காட்சி அளிக்கும் செங்கோட்டு அதிபனே, அக்னியைக் கொட்டிக்கோண்டு, மணம் நிரம்பிய, தென்றல் காற்று, காமனின் ஐந்து பாணங்களும், என் உடலில் தைத்த புண்வழியே போய், என் உயிரை வருத்திப் போக்குகிறது. ..


தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந்
தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல்
தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண்
தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே. 83



தாமரையில் உற்பவித்த பிரம்மனால், தலையில் எழுதப்பட்ட, அனுபவ பிராப்தம், ஒருகாலும் மாறாது, என்று அறிந்திருந்தும், என்னுடைய புத்தி, மென்மேலும் ஆசைப் படுவதினால், பயன் ஏதும் இல்லை என்று, நினைக்காததற்கு என்ன காரணம்? சேயோனே, பயனற்ற சாத்திரங்களை, அழித்துவிடும், ஆகம நூல்களை அருளியவனே, அக்னி தேவன் .. இந்தத் தீப்பொறி மிகவும் அற்பமானது, என் கரத்தால் மிகவும் சுலபமாகத் தாங்கிச் செல்வேன், .. என்று மமதையுடன் சொல்ல, தன்னுடைய சிவந்த கண்களினால், அந்த அக்னியின், நிறமும் காந்தியும், வருத்தமுறவே, கருகிப் போகும்படி கோபித்தவனே. ..


சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ்
சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண்
சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவா
சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே. 84



ஏக வஸ்துவாகிய, சிவபெருமானிடத்தில், ஜெனித்து, வேலாயுதத்தைக் கரத்தில் பிடித்தவனே, தினைப்புனத்தைக் காத்து வந்த, வஞ்சிக் கொடி போன்ற, குறிஞ்சி நிலத்தில் வசித்து வந்த வள்ளி நாயகியின், பக்கத்தை விட்டு நீங்காத, மயில் வீரனே, இவ்வுலகத்தில் சென்று, உன் சிவந்த விழியால், எல்லாவற்றையும் அழித்து வந்த மா மரமாக நின்ற சூரபத்மனை, கோபி கோபி (கோபிப்பாயாக), என்று கூறி வேலாயுதத்தை ஏவிய, வலிமையுடைய வீரனே, மிகுந்த பொறுமை என்னும், பாணத்தின், கூர்மையினால் அடிபட்டு, கோபம் எனகிற மிருகம், விழுந்து விட்டது, உன்னுடைய அருட் பிரகாசம் என்னிடம் கலந்தவுடனே. என்ன ஆச்சரியம் ..


சேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண்
சேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற்
சேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன்
சேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே. 85



கந்தக் கடவுளே, கடப்ப மாலையை அணிந்து, அசுரர்களின் கூட்டத்தை, தெளிந்த அலைகளை உடைய சமுத்திரத்தில், கண்கள் கோபத்தால் சிவந்து, அந்த, மா மரமாய் நின்ற சூரனுடன், போரிட்டு கொன்ற அழகிய வேலாயுதத்தை உடையவனே, அழகிய ஜடையின் மேல், இளம் பிறை, கங்கா ஜலம், சர்ப்பங்கள், இவைகள் எல்லாம் (நடனமாடும்போது) துள்ளிக் குதிக்கும்படி, சூடி இருக்கும் பரமசிவனின் குமாரனே, சுற்றமாக பற்றிக் கொள்ளும், மனை வாழ்க்கை, பெண்டிர், என்று சொல்லப்படுகின்ற, இந்தப் பிரபஞ்ச சேற்றில், மெலிந்து வருந்துகிறேன், என்னைக் காத்தருள்வாயாக. ..


சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற்
சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற்
சேறலைத் தாறலைக் தீர்க்குங் குமார திரியவினைச்
சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே. 86



சேற்றை, உழக்கி, ஆற்றின் அலையில், மேலே எழுந்து, வளப்பமான, பாக்கு மரத்தில், சேல் மீன்கள், மரத்தின் உச்சியில் இருக்கும், குலைகளை, மோதித் தாக்கும், செந்திற் பதியோனே, என் சித்தமானது, கெட்ட மார்க்கத்தில், போய்ச் சேருவதையும், அளவில்லாத அஞ்ஞான இருளை அடைவதையும், நீக்குகின்ற குமாரக்கடவுளே, மாறுபடும்படி, இருவினைகளால் ஏற்படும் பிரபஞ்சச் சேற்றில், என்னை உழல வைத்து, வழிப்பறி செய்பவர் போல் என் உயிரைப் போக்கிவிடத் தகுமோ? உன்னுடைய அருட் பிரகாசத்தின் உண்மைத் திறனை உணர்ந்து அதுவே பற்றுக் கோடாகக் கருதி இருக்கும் என்னை (ஆறலைக்கத் தகுமோ?). ..


திறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந்
திறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல்
திறம்பா டுவரிதழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந்
திறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே. 87



உன்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ்ந்து பேசுகின்றார், குளிர்ந்த தினைப் புனத்தில் வாழுகின்ற தேவதையே என்று புகழ்கின்றார் (இவர் யார் எனில்), என்றும் கெடுதலையையே செய்து வந்த, மா மரமாய் நின்ற சூரபத்மாவை, தன்னுடைய சுற்றத்தாருடன், உவர்ப்பை உடைய, பெரிய சமுத்திரத்தில், அழிந்து போனான், என்று தேவர்கள் எல்லாம் பேசும்படியாக, அவனை அழித்த கந்தக் கடவுள் ஆவார், செழுமையான தினைப் புனத்திலிருந்து, நீங்கிச் செல்லாத, (ஏ வள்ளி நாயகியே), பவளம் போன்ற, உன்னுடைய அதரத்தைப் பார்த்து, ஏதாவது மறு மொழி வராதா என்று, சித்தம் குலைந்து நிற்கின்றார் (இப்பேற்பட்டவர்), திருச்செந்தூராகிய தம் பதியிலும் இதே அன்பைக் காட்டினால், நம்முடைய உபசாரத்தைக் கொள்ள, இவர் தகுதி உள்ளவரே. ..


செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச்
செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர்பிரான்
செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ்
செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே. 88



சேற்றில் உண்டாவதும், அழகுள்ளதும், ஒப்பற்றதும், ஒளி வீசுவதும், சிரேஷ்டதுமான, பிரம்மாவின் இருப்பிடமான தாமரையைப் போலவும், சிவபெருமான் அமுதைப்போல உண்ட ஆலகால விஷத்தைப் போலவும், வெற்றி நிரம்பிய, லங்காபுரியின், பிரகாசம் பொருந்திய அழகை, கோபித்து அழித்த, மேக வர்ணனாகிய ஸ்ரீராமனின், பாணத்தைப் போலவும், இந்திரனின், போர் புரியும், கையில் தரித்திருக்கும் உடை வாளைப் போலவும், கூர்மையான வேலாயுதத்தைப் போலவும், ஒத்திருக்கின்றன, இந்த முருகக் கடவுள் வீற்றிருக்கும், நிலத்தை (உழுகின்ற), கலப்பையை, மோதிக் கோபிக்கின்ற, வாளை மீன்கள், ஊறுகின்ற, செந்தில் பதியில், வசிக்கின்ற (இப்பெண்ணின்), சேல் கெண்டை மீன் போன்ற இரு கண்களுமே. ..


சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண்
சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச்
சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச்
சேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே. 89



அசோக மரத்தை இருப்பிடமாகக் கொண்ட அமணர்கள், உயர்ந்த, அந்த வலிய கழுவில் ஏறி மடியும்படி, சம்பந்தப் பிள்ளையாக அவதரித்து தேவாரம் பாடி ஜெயித்தவன், விழியானது, சேல் மீனையும் வேலாயுதத்தினையும் ஒத்த கூரிய விழியை உடைய, காட்டாற்றின் வளப்பத்தை உடைய வள்ளிமலைக் காட்டில் அவதரித்த வள்ளி நாயகியின், நாயகன், பஞ்சேந்திரியங்களின் சேஷ்டைகளை, நீக்கிய தவ சிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும் ஏற்பட்ட, ஆபத்துக்களுக்குக் காரணமான, சத்துருவாகிய சூரபத்மாவை, குற்றும்படி, இறுக்கக்கட்டிய, பிதாம்பரப் பட்டில், எல்லா மாதர்களும், தங்கள் தங்கள் உள்ளங்களை, கப்பமாக செலுத்திவிட்டனர். ..


சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச்
சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா
சித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ்
சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே. 90



கடல் அலை போல் அலைகின்ற மனதை உடையவர் மோட்சம் அடையும் பொருட்டு, வெளி பூஜை மட்டும் செய்து வீணாக காலத்தைப் போக்குவதால் என்ன பயன்? எல்லோருக்கும் இறைவனாகிய, எலும்பு மாலை பூண்ட சிவபெருமானின், குழந்தையே, செந்திலாண்டவனே, சமுத்திரத்தின் கண், தங்கள் தங்கள் பெருமையை, கூறி ஆர்ப்பாரித்து வந்த, அசுரர்களை, அழித்த கந்தக் கடவுளே, சந்திரன், கோயில் மதில் மேல், தவழ்ந்து செல்லும் (அந்த அளவிற்கு உயர்ந்துள்ள), ஸ்ரீரங்கநாதரின், பிள்ளையாகிய பிரம்மா (ஓதும்), வேதங்கள் பூஜிக்கும், பாம்பு போன்ற செங்கோட்டு மலையில் வசிக்கும், சுவாமியே. ..


திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன
திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்
திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்
திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே. 91



சக்ராயுதத்தை, வலக் கையில், தரித்துள்ள, திருமாலால், தேடி கண்டு கொள்ள முடியாத (பரமசிவனுக்கு), பிரணவப் பொருளை உபதேசித்த, சுவாமிமலைப் பதி, வலம்புரி சங்குகள், வயல்களில், நிறைந்திருக்கும், இலஞ்சிப் பதி, திருச்செந்தூர், மேகங்கள் சூழ்ந்த சர்ப்பம் போன்ற திருச்செங்கோடு, திருவலம், வேறு பல தலங்களையும் சிருஷ்டித்து அருள் செய்த, குமாரக் கடவுளின், திருத்தணியில், மூங்கில், நந்தியாவட்டை மலரை, சூடி இருக்கும் குறிப்பு, இத்தினத்தில் நன்றாக அமைந்திருக்கிறது, தோழியே. ..


சேடி வணங்கு வளைத்தோ ளெனப்புணர் சேயவட
சேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற்
சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச்
சேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே. 92



அழகாக இருக்கிறது, இந்த மங்கையின், வளை அணிந்த தோள்கள், என்று மகிழ்ந்து சொல்லி முன்பு தேவைப்பட்ட காலத்தில் என்னைப் புணர்ந்த, குமாரக் கடவுளே, வெள்ளி மலையின் வட பாரிசத்தில் வாழும் வித்யாதரர்கள், வணங்குகின்ற, தணிகை மலைக்கு அதிபனே, நீ தழுவின பெருமிதத்தால், இருமாப்புக் கொண்டு, துவளுகின்ற, கொடி போன்ற இடையை உடைய பரத்தையரை, நான் நிந்தித்துப் பேச என்ன இருக்கிறது? எனது மார்பகத்தின் திரட்ச்சியை, இந்த மாதிரியாகக் குலைக்கும்படி, மழலை மொழி பேசும் இந்த பாலகன், செய்து விட்டான், என் அருகில் வராமல், அவ்விடத்திலேயே நின்று கொள். ..


செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச்
செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்த
செல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மானிறம்போற்
செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே. 93



மேகத்தை, அசைக்கின்ற, அழகிய சோலைகள், சூழ்ந்த, செந்திற்பதியான், அறிகின்றானில்லை, உலகம் எங்கும், பிச்சை வாங்குவதற்காக, போக வேண்டாம், என்று சொல்லி, சிவபெருமானின் கையிலுள்ள பிரம்ம கபாலத்தில், தனது ரத்தத்தை ஒழுக விட்டவரும், துன்பத்தையும், பயத்தையும், பெருமை வாய்ந்த லங்காபுரிக்கு, உண்டாக்கியவருமாகிய, மகாவிஷ்ணுவின், கரிய நிறத்தை, போல விளங்குகின்ற, இருள் நேரத்தில், மன்மதனின் ஐந்து பாணங்களும், மிக நுட்பமான இந்தப் பெண்ணின், பிராணனாது, அழிந்து போகும்படி, வருத்தி நீக்குகிறதை, (செந்திலான் அறிகின்றானில்லை). ..


சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற்
சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால்
சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற்
சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே. 94



சிவந்த கரும்பு வில்லை உடைய மன்மதனை, சாம்பலாகச் செய்த, நெருப்பு விழியை உடைய சிவபெருமானின், குமாரனே, எட்டு திக்குகளும் முன்போல ஸ்திரமான நிலையை அடையவும், ஸ்ரீரங்கநாதராகிய திருமாலின், குமாரனாகிய பிரம்மா, திகைப்பை அடையவும், சூரபத்மாவின் உடலை, அழித்து, பின்பு சமுத்திரத்தில் குளித்து வந்த, வேலாயுதத்தைக் கையில் ஏந்திக் கோண்டு, எம தூதர்கள் என்னைப் பிடித்துப் போக வந்தால், பெரிய சப்தத்தைப் போட்டு கடகொண்டு, எருமை வாகனத்தில் வரும், எமனுடைய வலிமைத் திறனை, நீ கண்டித்து அடக்க வேண்டும். ..


திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந்
திறவா வனச முனியைவென் றோய்தென் றிசைத்திருச்செந்
திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத்
திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே. 95



பாபமற்ற கைலாயத்தின், கதவைப் திறப்பதற்கு, திறவு கோலானவனே, கிரவுஞ்ச கிரியின் மார்பு, பிளக்கும்படி செய்து, ஆச்சரியமான விதத்தில், தாமரையில் வாழும் பிரம்மனை, ஜெயித்தவனே, தெற்கு திசையிலிருக்கும், செந்தில் பதியை விட்டு, நீங்காத, அழகிய மயில் வாகனத்தை உடையவனே, எனது உடல் அழியும் அந்தக் கடைசி காலத்தில், என்னுடைய மனதை, ஒருவழி படுத்த, அடைக்கல ஸ்தானம் எது எனில் உன்னுடைய மங்களகரமான, தண்டை அணிந்த திருத் தாள்களே. ..


திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால்
திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத்
திருக்கையம் போருகக் கைந் நீற்றின் மாற்றித்தென் னூல்சிவபத்
திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே. 96



திருக்கை என்னும் மீன்கள் வாழும், கடல்களோ? தாமரைகளோ? விடமோ? மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள கூரிய பாணமோ? சிவந்த வேலாயுதமோ? கண், கூன் பாண்டியனின் முதுகில் இருந்த கூனாகிய விகாரத்தை, தாமரை போன்ற, தன் திருக்கையில் தரித்த விபூதியினால், நேர்படச் செய்தவரும், தமிழ் நூலாகிய, சிவ பக்தியை உண்டாக்கும், ருக்கு வேத சாரமாகிய தேவாரப் பாக்களை, பர தெய்வம் யார் என்கிற சந்தேகத்தைத் தீர்த்து, சம்பந்தப் பிள்ளையாராக மொழிந்தருளிய குமாரக்கடவுளின், மலையின்கண் வாழும், இந்த இளம் பெண்ணின் கண்). ..


சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்
சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே. 97



அற்பமான, சிறு உமியைக் கூட, தர்மம் செய்வதற்கு மனமில்லாமல், மரத்தைப்போல ஈவு இரக்கம் இல்லாமல் இருப்பவர்களே, அழிந்து போவதும் ஜீவனுக்கு ஒதுங்கிடமான (இந்த தேகத்தில்), தும்மல் எற்படும் போதிலாவது, முருகா உன் அடைக்கலம் என்று சொல்லுங்கள், அதன் மூலமாக நற்கதி அடைவீர்கள், சிவந்த தினைப்புனத்தில் வாழும், வள்ளி நாயகிக்கு, தன்னுடைய வம்ச பரம்பரையை எடுத்து உரைத்து அவளுடைய அன்பை வேண்டி, நின்றவனும், வில்லைத் தரித்த கண்ணப்ப நாயனார், தான் முதலில் ருசி பார்த்து நைவேத்தியமாகக் கொடுத்த மாமிசத்தை, மிகவும் களிப்புடன் உண்டவரும், மேன்மையான விதத்தில், சர்ப்பத்தைத் தரித்த சடையை உடைய சிவபெருமானின், மைந்தனாகிய கந்தக் கடவுளின், சிறிய திருவடிகளை தியானித்துக் கொண்டே (தும்மும் போது 'குமரா சரணம்' என்று சொல்லுங்கள்). ..


சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட
சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்
சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்
சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே. 98



கலப்பையையும், முதலையின், தலையை, அற்று விழும்படி, எதிர்த்து தகர்த்த, சக்ராயுதத்தை, அழகிய கையில் தரித்திருக்கும், ஸ்ரீரங்கநாதராகிய திருமாலும், சிவாகமங்களை அருளிச் செய்த சிவபெருமானும், மன மகிழ்ச்சி கொள்ளும் ஆச்சார்ய மூர்த்தியே, செழுமை மிக்க தினை புனத்தில் வாழும், வாசனைத் திரவியம் பூசிய, மலை போன்ற மார்பகங்களை அணைத்த, கந்தக் கடவுளே, சிறந்த தமிழ் பனுவல்களில் சொல்லப்படும், சீர் முதலிய எட்டு வகைகளிலும் வல்லவனாகிய கவி சிரேஷ்டனனே, இசைப் பிரியனே, என்று துதிப்போருக்கு, தீவினைகள் கிட்ட அணுகாது. ..


தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்
தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்
தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்
தீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே. 99



அக்னியானது, தனது இயல்பாகிய எரிக்கும் தன்மையை விட்டது போல், கோபத்தை அடியோடு ஒழித்த, உள்ளத்துள், சத்யம் என்கிற ஞான விளக்கை, அணைந்து விடாமல் எப்போழுதும் பிரகாசிக்கும்படி, நம்முடைய, தீ வினையாகிய, இருள், நீங்கும்படி, ஏற்றி வைத்தோம், வளமையான தினைப் புனத்தில், தீர்ந்து போகாமல் எப்போழும் பசுமையாகவே இருக்கும், தினைப்புனத்தில் வாழும், மான் போன்ற வள்ளி நாயகியின், மணாளனும், உலக பசு பாச தொந்தங்களை அடியோடு நீக்கின அடியார்களுக்கு, செழுமையான பொன் போல் பிரகாசிக்கும் மோட்ச வீட்டை, வரமாகக் கொடுக்கும், முக்திச் செல்வனான முருகப்பெருமானுக்கு (மெய்த் தீபம் எடுத்தனம்). ..


செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்
செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்
செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்வி
செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே. 100



ஏ மனமே, சென்று, கந்தக் கடவுள் இப்பூவுலகத்தில் சம்பந்தராக அவதரித்த சீர்காழிப் பதியை, துதிப்பாயாக (அதன்), அந்தக் குமரக் கடவுளின் தெய்வீக நாயகியாகிய தேவசேனை, ஊர்ந்து செல்லும், மேகங்கள், நல்ல மழையைப் பொழிந்து, மிகவும் இகழ்ச்சிக்கிடமான, நம்முடைய வறுமை என்கிற நிலையை, போக்கி விடும், கொடிய எமன், நம் மேல் செலுத்தும் நரக தண்டனையை, அவனுடைய கை வேலாயுதமானது, போக்கி விடும், பக்திப் பயிரைக் காத்து வளர்த்த வள்ளி நாயகியின், பெரும் பேறாக விளங்கும், மணாளனாகிய முருகப் பெருமான், குக சாயுச்சியமாகிய தனது சரணங்களைக் கொடுத்து அருளுவான். ..





கந்தர் அந்தாதி முற்றும்.

No comments:

Post a Comment