Wednesday, April 4, 2012

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - திருவாய் மொழி மூன்றாம் பத்து

ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருவாய் மொழி மூன்றாம் பத்து

3013 முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே. 1.1.

3014 கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,
கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது,
ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ. 1.2.

3015 பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின், மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற,
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த,எம்
பரஞ்சோதி கோவிந்தா. பண்புரைக்க மாட்டேனே. 1.3.

3016 மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்,நின்
மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே? 1.4.

3017 வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்,
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்,
வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே? 1.5.

3018 ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,
போதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்
மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே? 1.6.

3019 வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை,
மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்
கேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே? 1.7.

3020 மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது,
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்,
மாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால்,
மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே? 1.8.

3021 மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,
மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே? 1.9.

3022 மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே,
முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே? 1.10.

3023 வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை,
சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்,
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்,
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே. 1.11

3024 முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,
அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,
வெந்நாள்நோய் வீய வினைகளைவேர் அறப்பாய்ந்து,
எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே? 2.1.

3025 வன்மா வையம் அளந்த எம் வாமனா,நின்
பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,
தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து,
நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ? 2.2.

3026 கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்,
எல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய்,
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா,
சொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே. 2.3.

3027 சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும்
ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்,
தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்
வாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே. 2.4.

3028 வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,
சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,
கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்,யா னுன்னை எங்குவந் தணுகிற்பனே? 2.5.

3029 கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்,
அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்
நற்பொற்fசோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே? 2.6.

3030 எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே.
மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி,
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற,
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே? 2.7.

3031 மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்,
ஓவுத லின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,
பாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே,
கூவுகின்றேன் காண்பாலன்f எங்கொய்தக் கூவுவனே? 2.8.

3032 கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன்,
மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்,
தாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே? 2.9.

3033 தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்,
அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல,
கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு,
நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே. 2.10.

3034 உயிர்க ளெல்லா உலகமு முடையவனை,
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும்,
உயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே. 2.11

3035 ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி,
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே 3.1

3036 எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே. 3.2

3037 அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,
தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,
எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே. 3.3

3038 ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,
நீச னென்நிறை வொன்றுமி லேன்,என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே. 3.4

3039 சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,
ஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ?,
வேதி யர்முழு வேதத் தமுதத்தை,
தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே. 3.5

3040 வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,
வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன
லாங்க டமை,அ துசுமந் தார்க்கட்கே. 3.6

3041 சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே. 3.7

3042 குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே. 3.8

3043 ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,
வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்
தாயன், நாண்மல ராமடித் தாமரை,
வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே. 3.9

3044 வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ,
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்,
மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே. 3.10

3045 தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை,
நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே. 3.11

3046 புகழுநல் ஒருவன் என்கோ.
பொருவில்சீர்ப் பூமி யென்கோ,
திகழும்தண் பரவை என்கோ.
தீயென்கோ. வாயு என்கோ,
நிகழும்ஆ காச மென்கோ.
நீள்சுடர் இரண்டும் என்கோ,
இகழ்விலிவ் வனைத்தும் என்கோ
கண்ணனைக் கூவுமாறே. 4.1

3047 கூவுமா றறிய மாட்டேன்
குன்றங்கள் அனைத்தும் என்கோ,
மேவுசீர் மாரி என்கோ.
விளங்குதா ரகைகள் என்கோ,
நாவியல் கலைகள் என்கோ.
ஞானநல் லாவி என்கோ,
பாவுசீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே. 4.2

3048 பங்கையக் கண்ணன் என்கோ.
பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ.
அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ.
திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ.
சாதிமா ணிக்கத் தையே. 4.3

3049 சாதிமா ணிக்கம் என்கோ.
சவிகோள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ,
தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ.
ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமல னையே. 4.4

3050 அச்சுதன் அமலன் என்கோ,
அடியவர் வினைகெடுக்கும்,
நச்சுமா மருந்தம் என்கோ.
நலங்கடல் அமுதம் என்கோ,
அச்சுவைக் கட்டி என்கோ.
அறுசுவை அடிசில் என்கோ,
நெய்ச்சுவைத் தேறல் என்கோ.
கனியென்கோ. பாலென் கேனோ. 4.5

3051 பாலென்கோ. நான்கு வேதப்
பயனென்கோ, சமய நீதி
நூலென்கோ. நுடங்கு கேள்வி
இசையென்கோ. இவற்றுள் நல்ல
மேலென்கோ, வினையின் மிக்க
பயனென்கோ, கண்ணன் என்கோ.
மாலென்கோ. மாயன் என்கோ
வானவர் ஆதி யையே. 4.6

3052 வானவர் ஆதி என்கோ.
வானவர் தெய்வம் என்கோ,
வானவர் போகம் என்கோ.
வானவர் முற்றும் என்கோ,
ஊனமில் செல்வம் என்கோ.
ஊனமில் சுவர்க்கம் என்கோ,
ஊனமில் மோக்கம் என்கோ.
ஒளிமணி வண்ண னையே. 4.7

3053 ஒளிமணி வண்ணன் என்கோ.
ஒருவனென் றேத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ.
நான்முகக் கடவுள் என்கோ,
அளிமகிழ்ந் துலகமெல்லாம்
படைத்தவை ஏத்த நின்ற,
களிமலர்த் துளவ னெம்மான்
கண்ணனை மாய னையே. 4.8

3054 கண்ணனை மாயன் றன்னைக்
கடல்கடைந் தமுதங் கொண்ட,
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் தன்மேல்,
நண்ணிநன் குறைகின் றானை
ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,
எண்ணுமா றறிய மாட்டேன்,
யாவையும் யவரும் தானே. 4.9

3055 யாவையும் யவரும் தானாய்
அவரவர் சமயந் தோறும்,
தோய்விலன் புலனைந் துக்கும்
சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
ஆவிசேர் உயிரின் உள்ளால்
அதுமோர் பற்றி லாத,
பாவனை அதனைக் கூடில்
அவனையும் கூட லாமே. 4.10

3056 கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன,
பாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,
வீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே 4.11

3057 மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர்
தண்கடல் வட்டத்துள் ளீரே. 5.1

3058 தண்கடல் வட்டத்துள் ளாரைத்
தமக்கிரை யாத்தடிந் துண்ணும்,
திண்கழற் காலசு ரர்க்குத்
தீங்கிழைக் கும்திரு மாலை,
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்துழ லாதார்,
மண்கொள் உலகில் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே. 5.2

3059 மலையை யெடுத்துக்கல் மாரி
காத்துப் பசுநிரை தன்னை,
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச்சொல் லிநிறெப் போதும்,
தலையினோ டாதனம் தட்டத்
தடுகுட்ட மாய்ப்பற வாதார்,
அலைகொள் நரகத் தழுந்திக்
கிடந்துழைக் கின்ற வம்பரே. 5.3

3060 வம்பவிழ் கோதை பொருட்டா
மால்விடை யேழும் அடர்த்த,
செம்பவ ளத்திரள் வாயன்
சிரீதரன் தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டமிட் டாடிக்
கோகுகட் டுண்டுழ லாதார்,
தம்பிறப் பால்பய னென்னே
சாது சனங்க ளிடையே? 5.4

3061 சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்ப தற்கு,
ஆதியஞ் சோதி யுருவை
அங்குவைத் திங்குப் பிறந்த,
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும்துள் ளாதார்,
ஓதி யுணர்ந்தவர் முன்னா
என்சவிப் பார்ம னிசரே? 5.5

3062 மனிசரும் மற்றும் முற்றுமாய்
மாயப் பிறவி பிறந்த,
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானை,
கனியைக் கரும்பினின் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை,
முனிவின்றி ஏத்திக் குனிப்பார்
முழுதுணர் நீர்மையி னாரே. 5.6

3063 நீர்மை நூற்றுவர் வீய
ஐவர்க் கருள்செய்து நின்று,
பார்மல்கு சேனை அவித்த
பரஞ்சுட ரைநினைந் தாடி.
நீர்மல்கு கண்ணின ராகி
நெஞ்சம் குழைந்துநை யாதே,
ஊர்மல்கி மோடு பருப்பார்
உத்தமர்க்கட் கென்செய் வாரே? 5.7

3064 வார்ப்புனல் அந்தண் ணருவி
வடதிரு வேங்கடத் தெந்தை,
பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப்
பித்தரென் றேபிறர் கூற,
ஊர்ப்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்கநின் றாடி,
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படு வாரே. 5.8

3065 அமரர் தொழப்படு வானை
அனைத்துல குக்கும் பிரானை,
அமரர் மனத்தினுள் யோகு
புணர்ந்தவன் தன்னோடொன் றாக,
அமரத் துணியவல் லார்கள்
ஒழியஅல் லாதவ ரெல்லாம்,
அமர நினைந்தெழுந் தாடி
அலற்றுவ தேகரு மமே. 5.9

3066 கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னை,
திருமணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை,
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளங் குழைந்தெழுந் தாடி,
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதமை தீர்ந்தே. 5.10

3067 தீர்ந்த அடியவர் தம்மைத்திருத்திப் பணிகொள்ள வல்ல,
ஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை,
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்,
நேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே. 5.11

3068 செய்ய தாமரைக் கண்ண னாயுல
கேழு முண்ட அவன்கண்டீர்,
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,
செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப்
பட்டி வைபடைத் தான்பின்னும்,
மொய்கொள் சோதியொ டாயி னானொரு
மூவ ராகிய மூர்த்தியே. 6.1

3069 மூவ ராகிய மூர்த்தி யைமுதல்
மூவர்க் குமுதல் வன்றன்னை,
சாவ முள்ளன நீக்கு வானைத்
தடங்க டல்கிடந் தான்தன்னைத்,
தேவ தேவனைத் தென்னி லங்கை
எரியெ ழச்செற்ற வில்லியை,
பாவ நாசனைப் பங்க யத்தடங்
கண்ண னைப்பர வுமினோ. 6.2

3070 பரவி வானவ ரேத்த நின்ற
பரம னைப்பரஞ் சோதியை,
குரவை கோத்த குழக னைமணி
வண்ண னைக்குடக் கூத்தனை,
அரவ மேறி யலைக டலம
ரும்து யில்கொண்ட அண்ணலை,
இரவும் நன்பக லும்வி டாதென்றும்
ஏத்து தல்மனம் வைம்மினோ. 6.3

3071 வைம்மின் நும்மனத் தென்று யானுரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்ம னோர்க ளுரைப்ப தென்? அது
நிற்க நாfடொறும், வானவர்
தம்மை யாளும் அவனும் நான்முக
னும்ச டைமுடி அண்ணலும்,
செம்மை யாலவன் பாத பங்கயம்
சிந்தித் தேத்தி திரிவரே. 6.4

3072 திரியும் கற்றொ டகல்வி சும்பு
திணிந்த மண்கிடந் தகடல்,
எரியும் தீயொ டிருசு டர்தெய்வம்,
மற்றும் மற்றும் முற்றுமாய்,
கரிய மேனியன் செய்ய தாமரைக்
கண்ணன் கண்ணன்விண் ணோரிறை,
சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள்
சுடர்மு டியண்ணல் தோற்றமே. 6.5

3073 தோற்றக் கேடவை யில்ல வனுடை
யான வனொரு மூர்த்தியாய்,
சீற்றத் தோடருள் பெற்ற வனடிக்
கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்,
நாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல்
ஆகி நின்ற,எம் வானவர்
ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை
யானி லேனெழு மைக்குமே. 6.6

3074 எழுமைக் குமென தாவிக் கின்னமு
தத்தி னைஎன தாருயிர்,
கெழுமி யகதிர்ச் சோதி யைமணி
வண்ண னைக்குடக் கூத்தனை,
விழுமி யவம ரர்மு நிவர்வி
ழுங்கும் கன்னல் கனியினை,
தொழுமின் தூயம னத்த ராயிறை
யும்நில் லாதுய ரங்களே. 6.7

3075 துயர மேதரு துன்ப இன்ப
வினைக ளாய்அ வை அல்லனாய்,
உயர நின்றதோர் சோதி யாயுல
கேழு முண்டுமிழ்ந் தான்தன்னை,
அயர வாங்கு நமன்த மர்க்கரு
நஞ்சி னையச்சு தன்தன்னை,
தயர தற்கும கனறன் னையன்றி
மற்றி லேன்தஞ்ச மாகவே. 6.8

3076 தஞ்ச மாகிய தந்தை தாயொடு
தானு மாயவை அல்லனாய்,
எஞ்ச லிலம ரர்க்கு லமுதல்
மூவர் தம்முள்ளு மாதியை,
அஞ்சி நீருல கத்துள் ளீர்கள்.
அவனி வனென்று கூழேன்மின்,
நெஞ்சி னால்நினைப் பான்ய வனவன்
ஆகும் நீள்கடல் வண்ணனே. 6.9

3077 கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு
மாணிக் கமென தாருயிர்
படவ ரவின ணைக்கி டந்த
பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர்,
அடவ ரும்படை மங்க ஐவர்க்கட்
காகி வெஞ்சமத்து, அன்றுதேர்
கடவி யபெரு மான்க னைகழல்
காண்ப தென்றுகொல் கண்களே? 6.10

3078 கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத்
துக்கு நன்றுமெ ளியனாய்,
மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள்
செய்யும் வானவ ரீசனை,
பண்கொள் சோலை வழுதி நாடன்
குருகைக் கோன்சட கோபன்சொல்,
பண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த
ராகக் கூடும் பயலுமினே. 6.11

3079 பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,
பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே. 7.1

3080 ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,
தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,
நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே. 7.2

3081 நாதனை ஞாலமும் வானமும்
ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனை, பொன்னெடுஞ் சக்கரத்
தெந்தை பிரான்தன்னை
பாதம் பணியவல் லாரைப்
பணியும் அவர்க்கண்டீர்,
ஓதும் பிறப்பிடை தோறெம்மை
யாளுடை யார்களே. 7.3

3082 உடையார்ந்த வாடையன் கண்டிகை
யன்உ டை நாணினன்
புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி
யன்மற்றும் பல்கலன்,
நடையா வுடைத்திரு நாரணன்
தொண்டர்தொண் டர்க்கண்டீர்,
இடையார் பிறப்பிடை தோறெமக்
கெம்பெரு மக்களே. 7.4

3083 பெருமக்க ளுள்ளவர் தம்பெரு
மானை, அமரர்கட்
கருமை யொழியஅ ன் றாரமு
தூட்டிய அப்பனை,
பெருமை பிதற்றவல் லாரைப்
பிதற்றும் அவர்க்கண்டீர்,
வருமையு மிம்மையும் நம்மை
யளிக்கும் பிராக்களே. 7.5

3084 அளிக்கும் பரமனை கண்ணனை
ஆழிப் பிரான்தன்னை,
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி
வண்ணனெம் மான்தன்னை,
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக்
கொள்ளும் அவர்க்கண்டீர்,
சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன்
மாந்தரங் காப்பரே. 7.6

3085 சன்மசன் மாந்தரங் காத்தடி
யார்களைக் கொண்டுபோய்,
தன்மை பொறுத்தித்தன் தாளிணைக்
கீழ்க்கொள்ளும் அப்பனை,
தொன்மை பிதற்றவல் லாறைப்
பிதற்றும் அவர்கண்டீர்,
நம்மை பெறுத்தெம்மை நாளுய்யக்
கொள்கின்ற நம்பரே. 7.7

3086 நம்பனை ஞாலம் படைத்தவ
னைதிரு மார்பனை,
உம்பர் உலகினில் யார்க்கும்
உணர்வரி யான்தன்னைக்,
கும்பி நரகர்கள் ஏத்துவ
ரேலும் அவர்கண்டீர்,
எம்பல் பிறப்பிடை தோறெம்
தொழுகுலம் தாங்களே. 7.8

3087 குவலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண்
டாளர்க ளாகிலும்,
வலந்தாங்கு சக்கரத் தண்ணல்
மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி
யாரெம் மடிகளே. 7.9

3088 அடியார்ந்த வையமுண் டாலிலை
யன்ன சஞ்செய்யும்,
படியாது மில்குழ விப்படி
யெந்தைபி ரான்றனக்கு,
அடியார் அடியார் தமடி
யார்அ டி யார்தமக்
கடியார் அடியார் தம்,அடி
யாரடி யோங்களே. 7.10

3089 அடியோங்கு நூற்றவர் வீயஅ ன்
றைவருக் கருள்செய்த
நெடியோனை, தென்குரு கூர்ச்சட
கோபன்குற் றேவல்கள்,
அடியார்ந்த ஆயிரத் துள்ளிவை
பத்தவன் தொண்டர்மேல்
முடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய்
யாமை முடியுமே. 7.11

3090 முடியானே. மூவுலகும் தொழுதேத் தும்சீர்
அடியானே, ஆழ்கடலைக் கடைந்தாய். புள்ளூர்
கொடியானே, கொண்டல்வண் ணா.அண்டத் துமபரில்
நெடியானே., என்று கிடக்குமென் நெஞ்சமே. 8.1

3091 நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென்
தஞ்சனே, தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற
நஞ்சனே, ஞாலங்கொள் வான்குற ளாகிய
வஞ்சனே, என்னுமெப் போதுமென் வாசகமே. 8.2

3092 வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்
நாயகனே, நாளிளந் திங்களைக் கோள்விடுத்து,
வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்
தாயவனே, என்று தடவுமென் கைகளே. 8.3

3093 கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,
வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,
பைகொள் பாம்பேறி உறைபர னே,உன்னை
மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே. 8.4

3094 கண்களால் காண வருங்கொலைன் றாசையால்,
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்,
பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து,
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே. 8.5

3095 செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் தேனுறைப் பத்துற்று,
புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கரத் துன்னையே
அவிவின்றி யாதரிக் கும்என தாவியே. 8.6

3096 ஆவியே. ஆரமு தே.என்னை ஆளுடை,
தூவியம் புள்ளுடை யாய்.சுடர் நேமியாய்,
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்,
கூவியும் காணப் பெறேனுன கோலமே. 8.7

3097 கோலமே. தாமரைக் கண்ணதோர் அஞ்சன
நீலமே, நின்றென தாவியை யீர்கின்ற
சீலமே, சென்றுசொல் லாதன முன்நிலாம்
காலமே, உன்னையெந் நாள்கண்டு கொள்வனே? 8.8

3098 கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே, கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓ ராயிரம் தோள்துணித்த
புள்வல்லாய், உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே? 8.9

3099 பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்
பெருந்தகாய், உன்கழல் காணிய பேதுற்று,
வருந்திநான் வாசக மாலைகொண்டு உன்னையே
இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே. 8.10

3100 புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை,
நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்,சொல்
வலங்கொண்ட ஆயிரத் துள்ளிவை யுமோர்ப்பத்து,
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே. 8.11

3101 சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,
என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,
என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. 9.1

3102 உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை
வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,
உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே? 9.2

3103 ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்
வழியைத் தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்,
கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்,
இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே. 9.3

3104 என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள்,
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்?,
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே. 9.4

3105 கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்,என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ. 9.5

3106 வம்மின் புலவீர்.நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ,
இம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்,
நும்மின் கவிகொண்டு நும்நு_மிட்டாதெய்வம் ஏத்தினால்,
செம்மின் சுடர்முடி என்திருமாலுக்குச் சேருமே. 9.6

3107 சேரும் கொடைபுகழ் எல்லையிலானை,ஓ ராயிரம்
பேரும் உடைய பிரானையல்லால்மற்று யான்கிலேன்,
மாரி யனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று,
பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் வேயவே. 9.7

3108 வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை,
ஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்,
காயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்,
மாய மனிசரை என்சொல்லவல்லேனென் வாய்கொண்டே? 9.8

3109 வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்,
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக் கேயுளன்,
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,
நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே. 9.9

3110 நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்,
சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி,
ஒன்றியொன் றியுல கம்படைத் தாங்கவி யாயினேற்கு,
என்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே? 9.10

3111 ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு,
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத் துள்ளிவையும் ஓர்ப்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே. 9.11

3112 சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்
சங்கொடு சக்கரம்வில்,
ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு
கொண்டுபுள் ளூர்ந்து,உலகில்
வன்மை யுடைய அரக்கர் அசுரரை
மாளப் படைபொருத,
நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற
நானோர் குறைவிலனே. 10.1

3113 குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்
கோலச்செந் தாமரைக்கண்,
உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த
ஒளிமணி வண்ணன் கண்ணன்,
கறையணி மூக்குடைப் புள்ளிக் கடாவி
அசுரரைக் காய்ந்தவம்மான்,
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
யானொரு முட்டிலனே. 10.2

3114 முட்டில்பல் போகத் தொருதனி நாயகன்
மூவுல குக்குரிய,
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக்
கனியைக் கரும்புதன்னை,
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை
வணங்கி அவன்திறத்துப்
பட்டபின் னை,இறை யாகிலும் யானென்
மனத்துப் பரிவிலனே. 10.3

3115 பரிவின்றி வாணனைக் காத்தும் என் றன்று
படையொடும் வந்தெதிர்ந்த
திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும்
அங்கியும் போர்தொலைய,
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
ஆயனைப் பொற்சக்கரத்
தரியினை, அச்சுத னைப்பற்றி யானிறை
யேனும் இடரிலனே. 10.4

3116 இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல்
லாவுல கும்கழிய,
படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன்
ஏறத்திண் தேர்க்கடவி,
சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை,
உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி
ஒன்றும் துயரிலனே. 10.5

3117 துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே,
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
தோன்றிக்கண் காணவந்து,
துயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில்
புக வுய்க்குமம்மான்,
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
யானோர்து ன்பமிலனே. 10.6

3118 துன்பமும் இன்பமு மாகிய செய்வினை
யாயுல கங்களுமாய்,
இன்பமில் வெந்நர காகி இனியநல்
வான் சுவர்க் கங்களுமாய்,
மன்பல் லுயிர்களு மாகிப் பலபல
மாய மயக்குகளால்,
இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்
றேதுமல் லலிலனே. 10.7

3119 அல்லலில் இன்பம் அளவிறந் தெங்கும்
அழகமர் சூழொளியன்,
அல்லி மலர்மகள் போக மயக்குகள்
ஆகியும் நிற்குமம்மான்,
எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல்
லாக்கரு மங்களும்செய்,
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
யானோர்துக் கமிலனே. 10.8

3120 துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி
துழாயலங் கல்பெருமான்,
மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து
வேண்டும் உருவுகொண்டு,
நக்கபி ரானோ டயன்முத லாகஎல்
லாரும் எவையும்,தன்னுள்
ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற்
றொன்றும் தளர்விலனே. 10.9

3121 தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த
தனிமுதல் ஞானமொன்றாய்,
அளவுடை யைம்புலன் களறி யாவகை
யாலரு வாகிநிற்கும்,
வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள்
ஐந்தை யிருசுடரை,
கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
யானென்றும் கேடிலனே. 10.10

3122 கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு
கூர்ச்சட கோபன் சொன்ன,
பாடலோ ராயிரத் துளிவை பத்தும்
பயிற்றவல் லார்கட்கு,அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
நலனிடை யூர்தி பண்ணி,
வீடும்பெ றுத்தித்தன் மூவுல குக்கும்
தருமொரு நாயகமே. 10.11

No comments:

Post a Comment